நுகர்வோர் குறியீட்டு எண் பணவீக்கம் மாதந்தோறும் வெளியிடப்படும் - மத்திய அரசு

நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையில் பணவீக்கத்தை ஒவ்வொரு மாதமும் வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தற்போது வெளியிடப்படும் பணவீக்கம் மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படுவதால், விலைவாசி உயர்வை துல்லியமாக மதிப்பிட முடிவதில்லை. இந்த புள்ளி விவரத்தை கொண்டு ரிசர்வ் வங்கி பணக் கொள்கை ஆய்வு அறிக்கையில் முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதங்களில் ஏற்படுத்தம் மாற்றங்கள் எதிர்பார்த்த அளவிற்கு பலனை தருவதில்லை என்று கூறப்படுகிறது.

பல வெளிநாடுகளில் உள்ள ரிசர்வ் வங்கிகள், நுகர்வோர் விலை குறியீட்டு எண் பணவீக்கத்தின் அடிப்படையில் பணக் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வருகிறது.

நம் நாட்டில்தான் மொத்த விலைக் குறியீட்டு எண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. நுகர்வோர் குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்கத்தை வைத்து விலைவாசி உயர்வில் பணவீக்கம் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை துல்லியமாக கணக்கிட முடியும் இருப்பினும், இதன் தாக்கத்தை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .

மறைமுக வரி வசூல் ரூ. 2.85 லட்சம் கோடி


நடப்பு நிதி ஆண்டில் பரவலாக தேக்க நிலை நிலவியபோதிலும் மறைமுக வரி வசூல் 16 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையான 9 மாத காலத்தில் ரூ. 2,85,787 கோடி வசூலாகியுள்ளது. சேவைத் துறை வரி மிக அதிக அளவில் வசூலானதே இதற்கு முக்கியக் காரணமாகும்.

மறைமுக வரி விதிப்பில் சுங்கத்துறை, மத்திய உற்பத்தி வரி மற்றும் சேவை வரி ஆகியவை அடங்கும். கடந்த ஆண்டு இதே காலத்தில் மொத்தம் ரூ. 2,46,168 கோடி வசூலானது.

வரி வசூல் கணிசமாக உயர்ந்துள்ளதால், பட்ஜெட் இலக்கான ரூ. 3,92,908 கோடியை நடப்பு நிதி ஆண்டில் எட்ட முடியும் என்று மத்திய உற்பத்தி வரி மற்றும் சுங்க வரித்துறை தலைவர் எஸ்.கே. கோயல் தெரிவித்தார்.

2011-12-ம் நிதி ஆண்டின் மூன்று காலாண்டுகளில் பட்ஜெட் எதிர்பார்ப்பைவிட வரி வசூல் 72 சதவீதம் அதிகம் வசூலாகியுள்ளது. பெட்ரோலியம் பொருள் மீதான சுங்க வரி குறைப்பால் அரசுக்கு ரூ. 36 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டபோதிலும் வரி வருவாய் அதிகரித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் பெட்ரோலியப் பொருள் விலை உயர்வைத் தவிர்ப்பதற்காக வரியை மத்திய அரசு குறைத்தது. டிசம்பர் மாதத்தில் வரி வசூல் 15.9 சதவீதம் உயர்ந்து ரூ. 34,819 கோடியானது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் ரூ. 30,054 கோடி வசூலானது.

மத்திய உற்பத்தி வரி வசூல் 9.7 சதவீதம் உயர்ந்து ரூ. 12,546 கோடியைத் தொட்டது. நவம்பர் மாதத்தில் உற்பத்தி வரி வசூல் 6.5 சதவீதம் குறைந்த போதிலும் ஆண்டு இறுதியில் வசூல் அதிகரித்துள்ளது நல்ல அறிகுறி .

சேவை வரி வசூல் 48 சதவீதம் உயர்ந்து ரூ. 9,665 கோடியானது. சேவை வரி செலுத்துவதற்கான கால வரம்பு ஜனவரி 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதும் வசூல் அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாகும்.

சுங்க வரி வசூல் 4 சதவீதம் உயர்ந்து ரூ. 12,608 கோடியானது. ஏப்ரல் முதல் டிசம்பர் வரையான காலத்தில் சுங்க வரி வசூல் ரூ. 1,12,670 கோடியாகும். முந்தைய ஆண்டைக் காட்டிலும் 13 சதவீதம் அதிகமாகும்.

2011ம் ஆண்டு நவம்பரில்...தொழில் துறை உற்பத்தி 5.9 சதவீதம் வளர்ச்சி


கடந்த 2011ம் ஆண்டின் நவம்பர் மாதத்தில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி குறியீட்டு எண் (ஐ.ஐ.பி), 5.9 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. அதேசமயம், இது, கடந்த 2010ம் ஆண்டின் இதே மாதத்தில், 6.4 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது என, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2004-05ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு, நாட்டின் தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண் கணக்கிடப்படுகிறது.தற்காலிக புள்ளிவிவரத்தின்படி, தொழில் துறை உற்பத்தி குறியீட்டு எண், கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், 5.1 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டிருந்தது. இது, மறு மதிப்பீட்டில், 4.74 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தயாரிப்பு துறை:கணக்கீட்டு மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி 6.6 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு இதே மாதத்தில் இந்த வளர்ச்சி 6.5 சதவீதம் என்ற அளவில் இருந்தது. தொழில் துறை உற்பத்தி குறியீட்டு எண் கணக்கீடு செய்வதில், தயாரிப்பு துறையின் பங்களிப்பு 75 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
நுகர் பொருட்கள்:நுகர் பொருட்கள் துறையின் உற்பத்தி, 13.1 சதவீதம் என்ற அளவில் மிகச் சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த 2010ம் ஆண்டு இதே மாதத்தில், 0.7 சதவீதம் என்ற அளவில் குறைவாக இருந்தது. மேலும், இதே காலத்தில், நுகர்வோர் சாதன துறையின் உற்பத்தி, 7.2 சதவீதத்திலிருந்து, 11.2 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், மின் துறையின் உற்பத்தி, 14.6 சதவீதம் என்ற அளவில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது.


இது, இதற்கு முந்தைய 2010ம் ஆண்டின் இதே மாதத்தில், 4.6 சதவீதமாக இருந்தது.நுகர்வோர் சாதனங்கள் அல்லாத இதர துறையின் உற்பத்தி, 14.8 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த 2010ம் ஆண்டு இதே மாதத்தில், 4.4 சதவீதம் என்ற அளவில் சரிவடைந்திருந்தது.சுரங்கத்துறை:பல்வேறு துறைகளின் உற்பத்தி மிகவும் அதிகரித்துள்ள நிலையில், சுரங்கம் மற்றும் பொறியியல் துறைகளின் உற்பத்தி எதிர்மறை வளர்ச்சியை கண்டுள்ளன. சென்ற 2010ம் ஆண்டு நவம்பரில், 6.9 சதவீதமாக அதிகரித்து காணப்பட்ட சுரங்கத்துறையின் வளர்ச்சி, சென்ற 2011ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், 4.4 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டுள்ளது.


இது தவிர, சென்ற நவம்பரில், பொறியியல் துறை உற்பத்தி, 4.6 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டுள்ளது. அதேசமயம், கடந்த 2010ம் ஆண்டு இதே மாதத்தில் இத்துறையின் உற்பத்தி, 25.4 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டிருந்தது.அதேசமயம், கணக்கீட்டு மாதத்தில், அடிப்படை பொருட்கள் தயாரிப்பு துறையின் உற்பத்தி, 6.3 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே மாதத்தில், 5.7 சதவீதம் என்ற அளவில் குறைந்து காணப்பட்டது. இடைநிலைப் பொருட்கள் தயாரிப்பு துறையின் உற்பத்தி, இதற்கு முந்தைய ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் (4.3 சதவீதம்), 0.2 சதவீதம் என்ற அளவில் சற்று உயர்ந்துள்ளது.


இது குறித்து மத்திய திட்டக்குழுவின் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா கூறுகையில்," தொழில் துறை உற்பத்தி குறியீட்டு எண் 6 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என்பது ஒரு நல்ல முன்னேற்றத்திற்கான அறிகுறியாக உள்ளது. தொழில் துறை உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சுணக்க நிலை, நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டுடன் (அக்டோபர் -டிசம்பர்) முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது' என்று தெரிவித்தார்.


தற்போது தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண் வளர்ச்சி கண்டுள்ள நிலையில், ரிசர்வ் வங்கி, இம்மாதம் நடைபெற உள்ள நிதிக் கொள்கை குறித்த அதன் ஆய்வு கூட்டத்தில், முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்புள்ளது என, பல பொருளாதார ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதாகவும் அமையும். சென்ற 2011ம் ஆண்டின், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாக குறைந்துள்ளது. இது, முந்தைய ஒன்பது காலாண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக குறைவான வளர்ச்சியாகும்.


பணவீக்கம்:நாட்டின் பொதுப் பணவீக்கம்,கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 9 சதவீதத்திற்கும் அதிகமாகவே இருந்து வருகிறது. பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், ரிசர்வ் வங்கி, சென்ற 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல், இது வரையிலுமாக, முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதத்தை 13 முறை உயர்த்தியுள்ளது. இதனால், வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் பல மடங்கு அதிகரித்துள்ளது.


இதனால், நிறுவனங்கள், விரிவாக்கம் மற்றும் புதிய முதலீடுகளுக்கு, வங்கிகளிடமிருந்து கடன் வாங்குவதை வெகுவாக குறைத்துக் கொண்டுள்ளன. இது, தொழில் துறை உற்பத்தி வளர்ச்சிக்கு இடையூறாக உள்ளது.

'ஜன கண மன' பாடலுக்கு நூறு வயது


இந்தியாவின் தேசிய கீதமாக விளங்கும் 'ஜன கண மன'வுக்கு நூறு வயதாகிறது.

இந்த கீதம் முதன்முதலில் பாடப்பட்டது கொல்கத்தாவில் மிகச் சரியாக நூறு வருடங்கள் முன்பு தான். பிற்பாடு இது பல்வேறு சர்ச்சைகளை எல்லாம் சமாளித்து இந்தியாவின் தேசிய கீதமாக உருவெடுத்தது.


இந்தப் பாடலை இயற்றிய வங்காள மஹாகவி ரபீந்திரநாத் தாகூர்தான், இலக்கியத்துக்காக நோபெல் பரிசு வென்ற முதல் ஆசியர் ஆவார்.

1911ஆம் ஆண்டு டிசம்பர் இருபத்து ஏழாம் தேதி கொல்கத்தாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தொடரில்தான் இந்தப் பாடல் முதன்முதலில் பாடப்பட்டது.

அது முதல் இந்திய மக்களின் கற்பனையையும் அரசியல் அமைப்பின் கற்பனையையும் வசீகரித்த ஒரு பாடலாக இது இருந்து வருகிறது.

சகல விதமான அரசு நிகழ்ச்சிகளிலும் பாடப்பெற்று இந்தியர்கள் அனைவரும் எழுந்து நின்று அசையாமல் மரியாதை செலுத்தும் ஒரு பாடலாக 'ஜன கண மன' திகழ்கிறது.

நவீன வடிவங்கள்

அவ்வப்போது புதிய தலைமுறையின் ரசனைக்கு ஏற்ப நவீன இசை வடிவம் பெற்று இப்பாடல் வலம் வருவதும் உண்டு.

முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசைப்பேழை, முன்னணி நடிகர் ஷாருக் கானின் திரைப்படம் போன்றவற்றில் வெவ்வேறு நவீன இசை வடிவங்களில் இப்பாடல் இடம்பெற்றிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆனால் மறுபுறம் இந்தியா சுதந்திரம் பெற்று 65 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் இந்தப் பாடல் பற்றிய அரசியல் சர்ச்சைகள் தொடருகின்றன.

சர்ச்சைகள்

'ஜன கண மன'வின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு கலாச்சார அமைப்பொன்று ஏற்பாடு செய்த வேளையில், இந்தியாவின் வட கிழக்குப் பகுதி இந்தப் பாடலில் இருந்து விடுபட்டுள்ளது அதனையும் இப்பாடல் வரிகளில் சேர்க்க வேண்டுமென அஸாம் மாநிலத்தில் இருந்து குரல்கள் ஒலித்திருந்தன.

"பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இருந்த இந்தியப் பகுதிகள்தான் இந்தப் பாடலில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தியாவின் வட கிழக்கு பிரதேசத்தில் பெரும் பகுதி பிரிட்டிஷ் ஆட்சிக்கு வெளியில் இருந்ததால் அப்பிரதேசம் இப்பாடலின் வரிகளில் இடம்பெறவில்லை" என அஸ்ஸாமைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் குமார் தீபக் தாஸ் சுட்டிக்காட்டுகிறார்.

வட கிழக்கு பிரதேசத்தையும் பாடலில் சேர்த்தால், அப்பகுதி மக்களுக்கு இருக்கக்கூடிய தாங்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறோம் என்ற உணர்வு தணிய உதவும் என்று அவர் வாதிடுகிறார்.

இந்தப் பாடல் வரியில் இருந்து சிந்துவை நீக்கிவிட்டு காஷ்மீரை சேர்க்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது கூட நடந்திருக்கிறது.

தேசிய கீத அந்தஸ்துக்கு போட்டி

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவேகூட இந்தப் பாடல் தொடர்பில் சர்ச்சை இருந்தது.

இந்த கீதத்தை தேசிய கீதமாக ஆக்க வேண்டும் என்று வாதிட்டதற்கு பலர் இருந்த அதே நேரத்தில் இதனை தேசிய கீதமாக ஆக்கக்கூடாது என்று வாதிட்டவர்களும் அதிகம்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு தாழ் பணியும் ஒரு பாடல் இது என்று இவர்கள் வாதிட்டார்கள்.

பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய 'வந்தே மாதரம்' என்ற பாடலைத்தான் தேசிய கீதமாக அறிவிக்க வேண்டும் என்று ஒரு சாராரின் பிரச்சாரம் அமைந்திருந்தது.

ஆனாலும் மஹாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோரின் ஆதரவு காரணமாக 'ஜன கண மன' தேசிய கீதமாகவும் 'வந்தே மாதரம்' தேசியப் பாடலாகவும் அறிவிக்கப்பட்டன என்பதாக வரலாறு அமைந்துள்ளது.

பங்குச்சந்தை செய்திகள்


பங்குச் சந்தை மூலம் பயங்கரவாதிகளுக்கு பெரும் பணம்!



இந்திய பங்குச் சந்தை மூலமாக பயங்கரவாதிகளுக்கு பெருமளவில் பணம் சென்றிருக்கும் விவரத்தை நாடாளுமன்றத்தில் அரசு வெளியிட்டது.

கடந்த 3 ஆண்டுகளில் 10 முறை பங்குச் சந்தை மூலம் இப்படி பணம் சென்றுள்ளதற்கான ஆதாரம் மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கு கிடைத்துள்ளது.

இத்தகவலை மத்திய நிதித்துறை இணையமைச்சர் நமோ நாராயண் மீனா மக்களவையில் வெள்ளிக்கிழமை எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், "பங்குச் சந்தையில் சந்தேகத்துக்கு இடமான பரிமாற்றங்கள் தொடர்பான அறிக்கைகள் கிடைத்துள்ளன. இந்த பரிமாற்றங்கள் மூலம் பயங்கரவாதிகளுக்கு பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. கறுப்புப் பணம் பரிமாற்றமும் இதில் நடந்துள்ளது.

இதில் இடைத் தரகர்கள், பங்குச் சந்தை சார்ந்த சில நிறுவனங்களுக்கும் தொடர்பு உள்ளது. இது தொடர்பாக புலனாய்வு அமைப்புகள் மேலும் விசாரணை நடத்தி வருகின்றன," என்றார்.

இந்திய தொழில்துறை வளர்ச்சி பெரும் சரிவு!: 8.7%லிருந்து 3.5% ஆக குறைந்தது!

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தொழில்துறை வளர்ச்சி 5.1 சதவீதம் சரிந்துள்ளது.

கடந்த ஆண்டு 8.7 சதவீதமாக இருந்த இந்த வளர்ச்சி வெறும் 3.5 சதவீதமாக சுருங்கிவிட்டது.

தொழில்துறையில் 76 சதவீதத்தை உற்பத்தித் துறை தான் பூர்த்தி செய்கிறது. இந்தத் துறையில் தான் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக சுரங்கத்துறை, மின் உற்பத்தித் துறை, ரப்பர், பிளாஸ்டிக் உற்பத்தி ஆகியவை கடுமையான சரிவை சந்தித்துள்ளன.

மருத்துவ உபகரணங்கள், வாட்சுகள், பாய்லர்கள், பழச்சாறு, தோல் பொருட்கள், மார்பிள்கள்-டைல்கள், அரிசி உற்பத்தி உள்ளிட்ட சில பிரிவுகள் தான் வளர்ச்சியை சந்தித்துள்ளன.