Showing posts with label செய்தி. Show all posts
Showing posts with label செய்தி. Show all posts

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்

"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"

சும்மாவா சொன்னாக பெரியவங்க !!!

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.

இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் "எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!

அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.


கடலில் மிதக்கும் காற்றாலை





வளரும் நாடுகளில் அதிகரித்து வரும் மின் சக்தியின் தேவையை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் பாரம்பரிய முறைகளில் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வரும் அனல் மின்சாரம், நீர் மின்சாரம் ஆகியவற்றை விட காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், செலவு குறைந்ததாகவும், அணு மின்சாரத்தைப் போல அல்லாமல் கொஞ்சமும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வழிமுறையாகவும் இருந்து வருகிறது.


இதனால் நிலப்பகுதிகள் குறைந்த நாடுகளில் கூட காற்றாலைகளை புதிய உத்திகளுடன் பயன்படுத்தும் முறை பிரபலமாகி வருகிறது. அவற்றில் ஒன்றுதான் கடலில் மிதந்து கொண்டே அங்கு வீசும் காற்றின் இயக்க சக்தியை மின்சக்தியாக மாற்றவல்ல காற்றாலை மின்சாரத் தொழில்நுட்பம். உலக சமாதனதுக்காக உழைக்கும் நோர்வே நாட்டிலும், போச்சுக்கல் உள்ளிட்ட இன்னும் சில நாடுகளிலும் காற்றாலை மின்சாரம் பிரபலமடைந்து வருகிறது.


ஹைவிண்ட் (Hywind) என அழைக்கப்படும் 2.3 மெகா வாட் மின்னாற்றலை உற்பத்தி செய்யும் திறனுடன் கூடிய மிதக்கும் காற்றாலைகளை இந்த நாடுகளுக்கு 'சிம்மென்ஸ்'(siemens) நிறுவனம் தயாரித்து வழங்கி வருகிறது. தற்போது நோர்வே நாட்டின் கடற்கரையோரங்களில் சோதனை முறையில் இயக்கப்பட்டு எதிர்பார்க்கப்பட்ட அளவில் மின் உற்பத்தி பெறப்பட்டுள்ளதால், இந்த மிதக்கும் காற்றாலைகளை வட அமெரிக்கக் கரையோரங்கள் மற்றும் இங்கிலாந்து  உள்ளிட்ட நாடுகளின் கடற்கரையோரங்களிலும் அமைப்பதற்கு பல பன்னாட்டு மரபுசாரா மின் உற்பத்தி நிறுவனங்கள் அனுமதி பெற்றுவிட்டன.

மோடி, குஜராத், வளர்ச்சி





வரலாற்றில் வித்தியாசமான தேர்தல்

இந்திய வரலாறு மிக வித்தியாசமான ஒரு தேர்தலை எதிர்கொள்கிறது. இதுவரையிலான 15 மக்களவைத் தேர்தல்களும், இந்திய மக்கள் முன் எத்தனையோ பேசுபொருள்களை முன்னிறுத்தியிருக்கின்றன. சாதனைகளும் வாக்குறுதிகளும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள், ஊழல்களும் அதிகார துஷ்பிரயோகங்களும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள், மரணங்களும் தியாகங்களும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள், தனிக்கட்சி ஆட்சியும் நிலையான அரசும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள், கூட்டாட்சியும் அனைவருக்குமான வளர்ச்சியும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள்... எல்லாத் தேர்தல்களிலுமே குறைந்தபட்சம் மக்கள் முன் இரு தேர்வுகள் முன்னிறுத்தப்பட்டது உண்டு: இந்தக் கட்சியா, அந்தக் கட்சியா அல்லது இந்தக் கூட்டணியா, அந்தக் கூட்டணியா?

முதல்முறையாக மக்களவைத் தேர்தலை அதிபர் தேர்தல்போல எதிர்கொள்கிறது இந்தியா. பிரச்சாரத்தில் கட்சிகளின் பெயர்கள் அடிவாங்கிவிட்டன. இன்னும் சொல்லப்போனால், ஒரேயொரு மனிதரும் அவர் முன்னிறுத்தும் முழக்கமும்தான் இன்றைய இந்தியாவின், இந்தத் தேர்தலின் பேசுபொருள்: மோடி - குஜராத் - வளர்ச்சி.

நாட்டின் மிகப் பெரிய கட்சியான காங்கிரஸ் மோடிக்குப் பதில் அளிப்பதை மட்டுமே தேர்தல் பணியாகக் கொண்டிருக்க… ஏனைய கட்சிகளோ, மோடியை நோக்கிக் கேள்வி எழுப்புவதையே தேர்தல் பணியாகக் கொண்டிருக்கின்றன. ஆக, வாக்காளர்கள் முன் ஒரேயொரு கேள்விதான் எங்கும் தொக்கிநிற்கிறது: மோடி - குஜராத் - வளர்ச்சி வேண்டுமா; வேண்டாமா?

மக்களிடம் இப்படி ஒரு கேள்வி தொக்கிநிற்கிறது என்றால், நாடு முழுவதும் உள்ள ஊடகங்களிலும் இப்போது இதுதான் முக்கியமான விவாதம் - குஜராத்தில் உண்மையான வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறதா, இல்லையா? அது உண்மையாகவே ஒரு நல்ல முன்மாதிரிதானா, இல்லையா? மக்கள் உண்மையாகவே எப்படி இருக்கிறார்கள்? எது குஜராத்தில் மீண்டும் மீண்டும் மோடியைப் பதவியில் அமர்த்துகிறது?



மோடி செய்ததும் செய்யாததும்

இந்தச் சுற்றுப்பயணத்தில் இந்த மாபெரும் கேள்விக்கும் விவாதத்துக்கும் நானும் பதில் தேடினேன். குஜராத் அரசுத் தரப்பினர் சாதனைகளாகச் சொன்ன - அவர்கள் நிறைவேற்றியிருக்கும் பல்வேறு திட்டங்களைப் பார்க்க அலைந்தேன். அந்தத் திட்டங்கள் நன்மை - தீமைகளை அளவிட ஏகப்பட்ட குறிப்புகள், புள்ளிவிவரங்களைச் சேகரித்தேன். ஏராளமான மக்களிடம் கருத்துகள் கேட்டேன். சரி, உண்மை நிலவரம் என்ன?

குஜராத்தில் மோடி முன்னோடியான திட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறாரா? நிச்சயமாகக் கொண்டுவந்திருக்கிறார் - எப்படி கேரளத்திலும் தமிழகத்திலும் பிஹாரிலும் சில முன்னோடியான திட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றனவோ அப்படியே குஜராத்திலும் முன்னோடியான சில திட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. ஆனால், குஜராத்துக்கு வெளியே அவை ஊதிப் பெருக்கப்படுகின்றன. பல விஷயங்களில் துளியும் உண்மை இல்லாமல் மோடி கொண்டாடப்படுகிறார். ஒரு உதாரணம்: குஜராத் மதுவிலக்கு மாநிலமாக இருப்பதற்கு மோடி கொண்டாடப்படுவது. உண்மை என்னவென்றால், குஜராத் தனி மாநிலமாக உருவாக்கப்பட்ட 1960 முதலே அது மதுவிலக்கு மாநிலம். இதைச் செய்தது காங்கிரஸ் அரசாங்கம். உண்மையில் மோடி ஆட்சியில் மது கள்ளச் சந்தையில் நிறையவே கிடைக்கிறது. இரட்டை விலையில் விற்கிறார்கள். சமீபத்திய உதாரணம், நாட்டில் அதிக அளவில் ரூ.12.57 கோடி மதிப்புடைய மது, தேர்தல் ஆணையத்தால் குஜராத்தில் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது. இப்படி நிறைய அடுக்கலாம். ஆனால், வெற்றிகரமாக அந்த மாயையை நிறுவியிருக்கிறார்கள்.

சரி, இது மாயை என்றால், உள்ளூரில் எடுபடாதே? பின் எப்படி குஜராத்தில் மோடி தொடர்ந்து வெல்கிறார்? குஜராத்திலிருந்து புறப்படும்போது எடுத்த ஒரு புகைப்படம் அந்த உண்மையை வெளிப்படுத்தும் என்று நம்புகிறேன்.

உண்மையின் கதவுகள்

ஊரெல்லாம் சுற்றிவிட்டு, அகமதாபாத் திரும்பியபோதுதான் அதைக் கவனித்தேன். சில வீதிகளின் நுழைவாயில்களில் பெரிய பெரிய இரும்புக் கதவுகளை அமைத்திருந்தார்கள். அந்த வீதிகளின் புழுதி மண் சாலைகள் நாம் வெளியில் கேட்கும் குஜராத்தின் வளர்ச்சி கோஷங்களோடு எந்த வகையிலும் பொருந்தாதவை. மனதில் வித்தியாசமாகப் படவும், ஓரிடத்தில் காரை நிறுத்தச் சொல்லி இறங்கினேன். அகமதாபாதின் மையத்தை ஒட்டியிருக்கும் அந்தப் பகுதியின் பெயர் சோனி கே சால். மோடியின் தொகுதியான மணிநகருக்கு மிக அருகில் இருக்கும் பகுதி. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதி. “வீதியின் நுழைவாயிலில் ஏன் இரும்புக் கதவுகளை அமைத்திருக்கிறார்கள்?” என்று அங்குள்ளவர்களிடம் விசாரித்தபோது, கிடைத்த அதிரவைக்கும் பதில் இது: “பழங்கால முறைதான். கலவரம் ஏற்பட்டால் கதவைப் பூட்டிவிட்டுப் பதுங்க.”

அருகருகே இருந்த வீதிகளில் நுழைந்து சென்றபோது ஒரு விஷயத்தைக் கவனிக்க முடிந்தது. பெரும்பாலான வீடுகளில் நிலை, கதவுகள், ஜன்னல்கள் யாவும் இரும்பாலேயே அமைக்கப்பட்டிருந்தன. “ஏன் மரங்களைப் பயன்படுத்துவது இல்லையா?” என்ற என் அடுத்த கேள்விக்குக் கிடைத்த பதில் நிலைகுலையச் செய்தது. “கலவரத்தின்போது தீயை இது கொஞ்சமாவது தாக்குப்பிடிக்கும் இல்லையா? இங்கே கலவரங்களின்போது தீப்பந்தங்கள்தான் வீட்டுக்குள் முதலில் வரும். அப்புறம் என்ன வெட்டினாலும் கூறுபோட்டாலும் சரி… எரித்தால்தான் அவர்களுக்கு வெறி அடங்கும்.”

எனக்கு கோத்ராவும் நரோடா பாட்டியாவும் மாறி மாறி நினைவுக்கு வந்தன. கோத்ராவில் ரயில் பயணிகளைத் துடிக்கத் துடிக்கத் தீ வைத்துதான் அழித்தார்கள். நரோடா பாட்டியாவில் ஒன்பது மாதக் கர்ப்பிணியான கௌஸர் பானுவின் வயிற்றை வாளால் கிழித்து அந்தச் சிசுவை வெளியே எடுத்தவர்கள் தரையில் போட்டு அதை மிதித்தார்கள்; அப்போதும் ஆத்திரம் அடங்காமல், அதன் மீது எண்ணெயை ஊற்றி எரித்தார்கள்.

அங்கிருந்து வெளியே வந்தேன். கார் ஓட்டுநர் ஒரு இந்து. “சார்… இந்துக்களுக்கும் பயம் உண்டு சார். முஸ்லிம்கள் சுற்றி அதிகமாக வாழும் இடங்களில் இந்துக்களும் இப்படிப் பாதுகாப்புக்கு வீதி நுழைவாயிலில் இரும்புக் கதவுகள் போட்டுக்கொள்வது உண்டு” என்று சொல்லி ஓர் இடத்தைக் காட்டினார். பின்னர் சொன்னார்: “இந்த பயம்தான் சார் உண்மையில் குஜராத்தை ஆட்சி செய்கிறது. இரு தரப்பையும் வெவ்வேறு வகைகளில்.”

கார் அகலமான ஒரு சாலையில் பாய்ந்து செல்ல ஆரம்பித்தபோது, எனக்கு நடிகை நந்திதா தாஸ் ஒரு பேட்டியில் ‘மோடி - வளர்ச்சி - குஜராத்' தொடர்பான கேள்விக்கு அளித்திருந்த பதில் ஞாபகத்துக்கு வந்தது. அந்தப் பேட்டியில் நந்திதா தாஸ் இப்படிக் கூறியிருப்பார்: “ஜெர்மனியின் மிகச் சிறந்த சாலைகள் ஹிட்லர் ஆட்சியில் அமைக்கப்பட்டவை. ஜெர்மனியின் மிகச்சிறந்த மருத்துவ மனைகளும் அப்போதுதான் கட்டப்பட்டன. ஆனால், ஹிட்லரை நாம் யாரும் வளர்ச்சிக்காக நினைவுகூர்வதில்லை!”


From: the hindu-tamil 

ஒசாமா பின்லேடன்

"பின்லேடன்" என்ற பெயரைக் கேட்டதுமே அவன், மிகப் பெரிய தீவிரவாதி என்பது அனைவரின் மனதிலும் தோன்றிவிடும். அவன் ஏன் தீவிரவாதியாக மாறினான்? எப்படி மாறினான்? என்பது தொடர்பாக பல மாறுபட்ட தகவல்கள் உள்ளன. அவனைப் போலவே அந்த தகவல்களும் புரியாத புதிர்களாகவே உள்ளன. பின்லேடனின் முழுப் பெயர் ஓசாமா பின்முகம்மது பின் ஆவாட் பின்லேடன்.
1957-ம் ஆண்டு மார்ச் மாதம் 10-ந் தேதி சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் பிறந்தான். பின்லேடனின் தந்தை பெயர் முகம்மது பின்லேடன். சவூதி அரேபியாவில் கட்டுமானத் தொழிலில் இவர் முதன்மையானவராகத் திகழ்ந்தார். கோடீசுவரரான இவருக்கு 22 மனைவிகள் இருந்தனர் என்று கூறப்படுகிறது.
22 மனைவிகள் மூலம் முகம்மது பின்லேடனுக்கு 55 குழந்தைகள் பிறந்தனர். ஆனால் சிலர் 70 குழந்தைகளுக்கு மேல் உள்ளனர் என்று சொல்கிறார்கள். இதுவரை அந்த கணக்கு யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. இஸ்லாமிய சட்டத்துக்கு பயந்து முகம்மது பின்லேடன் 4 மனைவிகளை மட்டுமே கணக்கில் காட்டி இருந்தார். மற்ற மனைவியர் அதிகாரப்பூர்வமற்ற மனைவிகளாக இருந்து வந்தனர்.
அத்தகைய மனைவிகளில் ஒருவர் அமிதியா அல் அட்டாஸ். இவர் முகம்மது பின்லேடனின் 10-வது மனைவி என்று பட்டியலிடப்பட்டுள்ளது. முகம்மது பின்லேடன்- அமிதியா அல் அட்டாஸ் தம்பதியருக்கு ஒரே ஒரு மகன் பிறந்தான். அவன் தான் ஒசாமா பின்லேடன். தந்தையின் வழியில் ஒசாமாவும் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டான். கோடி, கோடியாக பணம் சம்பாதித்தான்.
ஒசாமா பின்லேடனுக்கு சிறு வயதில் இருந்தே இஸ்லாமியக் கோட்பாடுகளில் அதிக பற்று ஏற்பட்டது. சில கணிப்புகளின்படி, ஒசாமா அவரது தந்தைக்கு 7-வது மகன் ஆவான். இதனால் சிறு வயதிலேயே ஒசாமா பின்லேடன் செல்வ செழிப்பில் மிதந்தான். என்றாலும் இஸ்லாமிய நெறிமுறைகளை ஒரு போதும் அவன் மீறியதே இல்லை. படிக்கும் வயதில் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டான்.
இஸ்லாமிய நாடுகளின் மீது வல்லரசு நாடுகள் செலுத்திய ஆதிக்கம் இவனது இளம் வயதில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து 1979-ம் ஆண்டு தன் 22-வது வயதில் பின்லேடன் சொகுசு வாழ்க்கையைத் துறந்து இஸ்லாமிய மக்களுக்காக போராட முன்வந்தான். முதலில் அவனது எதிர்ப்பு போராட்டங்கள் சாத்வீகமாகத் தான் இருந்தது.
ஆனால், சில போராளி குழுக்கள் அவனுடன் தொடர்பை ஏற்படுத்துக் கொண்ட பிறகு அவனது போராட்டக்களம் மாறி விட்டது. நாளடைவில் அவன் தீவிரவாதியாக மாறினான். 1988-ம் ஆண்டு அல் கொய்தா எனும் தீவிரவாத இயக்கத்தை ஒசாமா பின்லேடன் தோற்றுவித்தான்.
இஸ்லாமிய நாடுகள் மீதான வெளிநாட்டு பாதிப்புகளை ஒழித்து கட்டுவதும், அதன் பிறகு, முகம்மது நபி வாழ்ந்த காலத்தைப் போல், ஒரு தலைவருக்குக் கீழ் உலகளாவிய இஸ்லாமிய ராஜ்ஜியத்தை உருவாக்க வேண்டும். இந்த இரண்டும் தான் அல்கொய்தா இயக்கத்தின் முக்கிய கொள்கைகளாக இருந்தன.
இந்நிலையில், 1989-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து ரஷிய படைகள் வெளியேறின. இதையடுத்து, அந்த நாட்டை அல்-கொய்தா தீவிரவாதிகள் கொஞ்சம், கொஞ்சமாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தங்களுக்கு ஆதரவாக செயல்பட்ட தலிபான்களின் ஆட்சியை ஆப்கானிஸ்தானில் ஏற்படுத்தினார்கள். இதன் மூலம் அல்கொய்தா தீவிரவாதிகள் சுதந்திரமாக ஆயுதப் பயிற்சிகள் பெற வாய்ப்பும் வசதியும் கிடைத்தன.
ஆப்கானிஸ்தானில் பல இடங்களில் முகாம்கள் உருவாக்கி அல்-கொய்தா தீவிரவாதிகள் பயிற்சி எடுத்தனர். அவர்களுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யும் ஏராளமான உதவிகளை செய்தது. தீவிரவாத இயக்கத்தை பலப்படுத்திக் கொண்ட பிறகு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஒசாமா பின்லேடன் சவால் விட தொடங்கினான்.
ஜிகாத் கொள்கைகள் உருவாக்கப்பட்டன. இஸ்லாமிய நாடுகளில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற வேண்டும் என்று முதன் முதலாக 1996-ம் ஆண்டு ஒசாமா பின்லேடன் 'பட்வா' வெளியிட்டான். அமெரிக்க மக்களையும், அமெரிக்க ராணுவ வீரர்களையும் பழிக்கு பழி வாங்க கொல்லப் போவதாக அறிவித்தான்.
பின்லேடனை சுண்டைக்காய் பயல் என்று அமெரிக்கா விமர்சித்தது. ஆனால் இது பற்றி கவலைப்படாத ஒசாமா பின்லேடன் இஸ்லாமிய நாடுகளில் தன் படைகளை பலப்படுத்தினான். 1998-ம் ஆண்டு மீண்டும் ஒரு தடவை அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்தான். இஸ்லாமியர்களை கொன்றால், அமெரிக்க மக்களுக்கு எதிராக புனிதப்போர் நடத்தப்படும் என்றான்.
பின்லேடனின் 2-வது எச்சரிக்கையையும் அமெரிக்கா அலட்சியம் செய்தது. இந்த நிலையில் ஆப்பிரிக்காவில் 1998-ல் இரண்டு நகரங்களில் அமெரிக்க தூதரகங்களில் குண்டுகள் வெடித்தது. 2000-ம் ஆண்டு ஏதென் துறைமுகத்தில் நின்ற அமெரிக்க கடற்படை கப்பல் மீது பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த சம்பவங்களுக்கு பிறகே பின்லேடன் பற்றி அமெரிக்கா கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தது. அல்-கொய்தா இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக தடை செய்தது. அமெரிக்காவைத் தொடர்ந்து ஐ.நா. சபையும் அல்-கொய்தா அமைப்புக்கு தடை விதித்தது.
இதையடுத்து, ஆஸ்திரேலியா, கனடா, இஸ்ரேல், ஜப்பான், ஆலந்து, ரஷியா, சுவீடன், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலும் அல்-கொய்தாவுக்கு தடை விதித்தன. ஐரோப்பிய ஒன்றியமும் அல்கொய்தாவை உலகின் அதி பயங்கரமான தீவிரவாத அமைப்பாக அறிவித்தது. இந்த காலக் கட்டத்தில் அல்-கொய்தா அமைப்பில் இருந்து தனித்து இயங்கும் சிறு, சிறு குழுக்கள் உலகம் முழுவதும் பல நாடுகளில் தற்கொலை தாக்குதல்களை நடத்தின.
அந்த சிறு குழுக்களின் மூலத்தை கண்டு பிடிக்க முடியாதபடி இருந்தது. உலகம் முழுவதும் அல்-கொய்தா தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறப்பட்டது. என்றாலும் 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந் தேதி அமெரிக்கா மீது அல்-கொய்தா நடத்திய பயங்கரமான தற்கொலை தாக்குதல்கள் சம்பவத்துக்கு பிறகு தான் பின்லேடன் பற்றி உலக மக்களுக்கு பரபரப்பு தகவல்கள் தெரியத் தொடங்கின.
2001-ம் ஆண்டு அமெரிக்க மீது மிகப் பெரிய தாக்குதல் ஒன்றை அல்-கொய்தா நடத்தப் போவதாக சுமார் 52 நாடுகளின் உளவுத்துறை அமெரிக்காவை எச்சரித்து உஷார்படுத்தியது. ஆனால் அமெரிக்கா, எதையும் கண்டுகொள்ளவில்லை.
அதிநவீன படைகளை வைத்துள்ள அமெரிக்கா, எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் தங்களை நெருங்க கூட முடியாது என்ற இறுமாப்புடன் இருந்தது. அந்த இறுமாப்பை 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந் தேதி அல்-கொய்தா தீவிரவாதிகள் தவிடு பொடிஆக்கி விட்டனர். அன்றைய தினம் அமெரிக்கர்களுக்கு துக்க தினமாக விடிந்தது.
அதிகாலை அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் இருந்து புறப்பட்ட 4 பெரிய விமானங்களை ஒரே சமயத்தில் 19 அல்-கொய்தா தீவிரவாதிகள் கடத்தினார்கள். விமானிகளை துரத்தி விட்டு, விமானம் ஓட்டும் பயிற்சி பெற்றிருந்த அல்கொய்தா தீவிரவாதிகள் அந்த 4 விமானத்தையும் ஓட்டினார்கள்.
அமெரிக்க ராணுவத்தின் தலைமையகமான, "பென்டகன்" மீது முதல் விமானம் மோதியது. இதில் பென்டகனின் ஒரு பகுதி அழிந்தது. இந்த அதிரடி தாக்குதலால் அமெரிக்கா நிலை குலைந்தது. அமெரிக்காவின் முப்படைகளும் மிரண்டு போயின.
அவர்கள் சுதாரித்து பதிலடி தாக்குதல் நடத்துவதற்குள் இரண்டு விமானங்களை அல்-கொய்தா தீவிரவாதிகள் நியூயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் மீது மோத செய்து, தற்கொலை தாக்குதல்களை நடத்தினார்கள். இரட்டை கோபுர தாக்குதலை அருகில் உள்ள கட்டிடத்தில் இருந்து தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நேரடி ஒளிபரப்பு செய்தது.
உலகம் முழுவதும் அந்த தற்கொலை தாக்குதலை தொலைக்காட்சிகளில் பார்த்தவர்கள் நடுநடுங்கிப் போனர்கள். 110 மாடிகளுடன் கம்பீரமாக நின்ற இரட்டை கோபுரம் சில நிமிடங்களில் இடிந்து, தகர்ந்து தரை மட்டமானது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் பிணமானார்கள்.
இந்த தாக்குதலுக்கு காரணமான ஒசாமாவை பழி தீர்க்க வேண்டும் என்ற தீராக்கோபம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, அவனை தங்களிடம் ஒப்படைக்கும்படி அமெரிக்கா கோரியது. இதற்கு ஆப்கானிஸ்தான் மறுக்கவே அந்த நாட்டின் மீது அமெரிக்கா விமானத்தாக்குதல் நடத்தியது. இதில் தலீபான்கள் ஆட்சியை இழந்தனர். பின்லேடனும் ஓடி ஒளிந்தான். அவன் பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாக நம்பப்பட்டது.
இதை நன்கு அறிந்து இருந்த பாகிஸ்தானின் அப்போதைய அதிபர் முஷரப், சண்டையில் பின்லேடன் இறந்து இருக்கலாம் என்றும், பாகிஸ்தானில் இல்லை என்றும், ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் உள்ள மலைகுன்றுகளில் அவன் பதுங்கி இருக்கலாம் என்று பொய்க்கதைகளை பரப்பினார்.
அமெரிக்காவின் உளவுத்துறையும் மற்ற நாடுகளின் உளவு நிறுவனங்களும் அவன் இருப்பிடத்தை கண்டறியும் முயற்சியில் இறங்கின. சில நாடுகள் அவனுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாத்ததால், அவன் எங்கிருக்கிறான்? என்பதை கண்டுபிடிப்பதில் உளவு அமைப்புகளுக்கு சிரமம் ஏற்பட்டது.
எனினும் அமெரிக்காவும், நேசநாடுகளும் முயற்சியை கைவிடவில்லை. இறுதியில், அவன் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பது உறுதியானது. பாகிஸ்தானில் பின்லேடன் மறைவிடத்தை கண்டுபிடிக்க அமெரிக்க உளவுத் துறை ஒரு யுக்தியை கையாண்டது.
அந்நாட்டு டாக்டர்கள் உதவியுடன் போலியான மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்தது. இந்த குழுவில் உள்ளவர்கள் கணக்கெடுப்பதுபோல், வீடு வீடாகச் சென்று, யார்... யார் இருக்கிறார்கள்? என்று ரகசியமாக நோட்டமிட்டனர். அதற்கு பலனும் கிடைத்தது.
ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள அபோதாபாத் என்ற ஊரில், ஆடம்பரமான பங்களாவில் அவன் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அமெரிக்கா அவசர அவசரமாக அந்த பங்களாவில் இருந்து சற்று தள்ளி, ராணுவ முகாமை ஏற்படுத்தியது.
குண்டுவீச்சு மற்றும் அதிரடி தாக்குதலில் நன்கு தேர்ச்சி பெற்ற கமாண்டோ படையினர் வரவழைக்கப்பட்டனர். அங்கிருந்தபடியே பின்லேடன் பதுங்கி இருந்த பங்களாவை கண்காணித்தனர். மேலும், அந்த பங்களா சுற்றுச்சுவரின் உள்பகுதியில் ரகசிய கேமராக்களை ஒட்ட வைத்து, உள்ளே இருப்பவர்களின் நடமாட்டத்தையும், பின்லேடன்கூட யார்...யார் இருக்கிறார்கள்? என்றும் கண்காணித்தனர்.
அதன் அடிப்படையில், அந்த பங்களாவில் அதிரடியாக புகுந்து, தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவ அதிகாரிகள் யுக்திகளை வகுத்தனர். அந்த யுக்தியை செயல்படுத்த 'சீல்ஸ்' அதிரடிப்படை வீரர்கள் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டது.
அந்த படையினர் 2.5.2011 அன்று, அதிரடியாக பின்லேடன் பங்களாவுக்குள் புகுந்து சோதனை போட்டனர். ஒரு அறையில் பதுங்கி இருந்த பின்லேடனையும், அவனது மகனையும், ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.
இந்த அதிரடித் தாக்குதல் சம்பவத்தை அமெரிக்காவில் இருந்தபடி அதிபர் ஒபாமா உள்ளிட்டோர் நேரில் பார்த்தனர் என்றும் அப்போது தகவல்கள் வெளியாகின. பின்லேடன் கொலை சம்பவத்தை வீடியோ திரையில் பார்த்தபடி ஒபாமா, ஹிலாரி கிளிண்டன் உள்ளிட்டோர் பரபரப்பான முகங்களுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், அங்கு மற்ற அறைகளில் இருந்த பின்லேடனின் 3 மனைவிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பாகிஸ்தான் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பின்லேடன் உடலை யு.எஸ்.எஸ்- கார்ல் விஷன் என்ற அதிநவீன கப்பலில் ஏற்றிச் சென்று கடலுக்கு அடியில் ராணுவம் புதைத்து விட்டது. பூமியில் புதைத்தால், அவனது ஆதரவாளர்கள் அவனுக்கு அங்கு நினைவிடம் எழுப்பினாலும் எழுப்பி விடுவார்கள் என்றே, யாரும் அடையாளம் காண முடியாத அளவுக்கு கடலுக்கு அடியில் புதைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.