தபால் துறை சார்பில் 1000 ஏ.டி.எம்.கள் திறக்க முடிவு!


 வங்கிகள் அமைத்துள்ள ஏ.டி.எம். போன்று இந்திய தபால்துறையும் ஏ.டி.எம்.க்‌களை துவக்க திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக 6 மாநிலங்களில் துவக்கப்படவுள்ளது. தேசியமயமாக்கப்பட்ட மற்றும் பொதுத்துறை வங்கிகள் , துரித பணசேவைக்காக ஏ.டி.எம். மையங்களை முக்கிய நகரங்களில் அமைத்துள்ளன. அதனைப்போன்று இந்திய தபால்துறையும் வணிக ரீதியில், சேமிப்பு கணக்கு மற்றும் இதர திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏ.டி.எம். மையங்களை பொதுமக்கள் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

இந்திய தபால்துறை நவீன தொழி்ல்நுட்ப முறையில் துவக்கப்படவுள்ளன. ஒருங்கிணைக்கப்பட்ட வங்கிகளைப்போல் தபால்துறையினையும் ஒருங்கிணக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வங்கிகளைப்போன்று ஏ.டி.எம். மையங்கள் துவக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக அசாம், உத்திரபிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தமிழகம் கர்நாடகா என 6 மாநிலங்களில் 1000 ஏ.டி.எம். மையங்கள் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

முதல்கட்டமாக 6 மாநிலங்களில் 1000 ஏ.டி.எம்.க்கள் இந்தாண்டு இறுதியில் துவக்கப்பட உள்ளது. வங்கிகளைப்போன்று இதில் பல்வேறு சலுகைகளை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்காக இன்போசி்ஸ், டி.சி.எஸ். ரிலையன்ஸ் உள்ளிட்ட ஐந்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நடவடிக்கை எடுககப்பட்டு வருகிறது 

சீன பொருளாதாரம் படிப்படியாக சரியும்

சீனாவின் பொருளாதார வளர்ச்சி, இன்னும், 15 ஆண்டுகளில் தற்போதைய, 8 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாகக் குறைந்து விடும் என்பதால், தேவையான கட்டமைப்பு மாற்றங்களை, அந்த நாடு மேற்கொள்ள வேண்டும் என, உலக வங்கி கூறியுள்ளது. உலக வங்கியின் அறிவுரையை ஏற்பதாக சீனாவும் தெரிவித்துள்ளது.

கடந்த, 2011 வரை, சீனாவின் பொருளாதார வளர்ச்சி, 9.2 சதவீதமாக உள்ளது. இந்தாண்டின் துவக்கத்தில் இது குறித்து ஆய்வு செய்த உலக வங்கி, இந்தாண்டில், பொருளாதார வளர்ச்சி, 8.4 சதவீதம் என்ற அளவிற்கு குறையும் என கூறியுள்ளது.

இந்நிலையில், சீன அமைச்சகங்களுடன் கலந்து ஆலோசித்து, சமீபத்திய பொருளாதார வளர்ச்சி முடிவுகளையும் கருத்தில் கொண்டு, உலக வங்கி நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த, 30 ஆண்டுகளாக சீன பொருளாதார வளர்ச்சியின் ஆண்டு சராசரி, 10 சதவீதம் என்ற அளவில் இருந்தது. கடந்த 2011ல், 8.5 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இது, 2026 - 2030க்குள் 5 சதவீதம் என்ற அளவிற்கு குறையும்.

இந்த வீழ்ச்சி விகிதத்தை தாமதப்படுத்துவது தான் சீனாவின் மிகப் பெரிய சவால். இதற்காக தற்போதைய பொருளாதார கொள்கைகளில் இருந்து மாறி, விரைவில் புதிய கொள்கைகளை அமல்படுத்த வேண்டும். குறிப்பாக, அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் அரசு நிறுவனங்களை விலக்கிவிட்டு, தனியார் மயமாக்கலுக்குத் தயாராக வேண்டும். சந்தை அடிப்படையிலான பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும்.

வங்கிகளை வர்த்தகமயமாக்கல், விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாத்தல், நில வருவாயில் உள்ளூர் அரசுகளைச் சார்ந்திருத்தலைக் குறைத்தல், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல், அனைவருக்கும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்டவற்றை சீனா மேற்கொள்ள வேண்டும். இந்த மாற்றங்கள் தான் சீன சமூகத்தை நிலையாக வைத்திருக்க உதவும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நுகர்வோர் குறியீட்டு எண் பணவீக்கம் மாதந்தோறும் வெளியிடப்படும் - மத்திய அரசு

நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையில் பணவீக்கத்தை ஒவ்வொரு மாதமும் வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தற்போது வெளியிடப்படும் பணவீக்கம் மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படுவதால், விலைவாசி உயர்வை துல்லியமாக மதிப்பிட முடிவதில்லை. இந்த புள்ளி விவரத்தை கொண்டு ரிசர்வ் வங்கி பணக் கொள்கை ஆய்வு அறிக்கையில் முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதங்களில் ஏற்படுத்தம் மாற்றங்கள் எதிர்பார்த்த அளவிற்கு பலனை தருவதில்லை என்று கூறப்படுகிறது.

பல வெளிநாடுகளில் உள்ள ரிசர்வ் வங்கிகள், நுகர்வோர் விலை குறியீட்டு எண் பணவீக்கத்தின் அடிப்படையில் பணக் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வருகிறது.

நம் நாட்டில்தான் மொத்த விலைக் குறியீட்டு எண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. நுகர்வோர் குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்கத்தை வைத்து விலைவாசி உயர்வில் பணவீக்கம் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை துல்லியமாக கணக்கிட முடியும் இருப்பினும், இதன் தாக்கத்தை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .

மறைமுக வரி வசூல் ரூ. 2.85 லட்சம் கோடி


நடப்பு நிதி ஆண்டில் பரவலாக தேக்க நிலை நிலவியபோதிலும் மறைமுக வரி வசூல் 16 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையான 9 மாத காலத்தில் ரூ. 2,85,787 கோடி வசூலாகியுள்ளது. சேவைத் துறை வரி மிக அதிக அளவில் வசூலானதே இதற்கு முக்கியக் காரணமாகும்.

மறைமுக வரி விதிப்பில் சுங்கத்துறை, மத்திய உற்பத்தி வரி மற்றும் சேவை வரி ஆகியவை அடங்கும். கடந்த ஆண்டு இதே காலத்தில் மொத்தம் ரூ. 2,46,168 கோடி வசூலானது.

வரி வசூல் கணிசமாக உயர்ந்துள்ளதால், பட்ஜெட் இலக்கான ரூ. 3,92,908 கோடியை நடப்பு நிதி ஆண்டில் எட்ட முடியும் என்று மத்திய உற்பத்தி வரி மற்றும் சுங்க வரித்துறை தலைவர் எஸ்.கே. கோயல் தெரிவித்தார்.

2011-12-ம் நிதி ஆண்டின் மூன்று காலாண்டுகளில் பட்ஜெட் எதிர்பார்ப்பைவிட வரி வசூல் 72 சதவீதம் அதிகம் வசூலாகியுள்ளது. பெட்ரோலியம் பொருள் மீதான சுங்க வரி குறைப்பால் அரசுக்கு ரூ. 36 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டபோதிலும் வரி வருவாய் அதிகரித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் பெட்ரோலியப் பொருள் விலை உயர்வைத் தவிர்ப்பதற்காக வரியை மத்திய அரசு குறைத்தது. டிசம்பர் மாதத்தில் வரி வசூல் 15.9 சதவீதம் உயர்ந்து ரூ. 34,819 கோடியானது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் ரூ. 30,054 கோடி வசூலானது.

மத்திய உற்பத்தி வரி வசூல் 9.7 சதவீதம் உயர்ந்து ரூ. 12,546 கோடியைத் தொட்டது. நவம்பர் மாதத்தில் உற்பத்தி வரி வசூல் 6.5 சதவீதம் குறைந்த போதிலும் ஆண்டு இறுதியில் வசூல் அதிகரித்துள்ளது நல்ல அறிகுறி .

சேவை வரி வசூல் 48 சதவீதம் உயர்ந்து ரூ. 9,665 கோடியானது. சேவை வரி செலுத்துவதற்கான கால வரம்பு ஜனவரி 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதும் வசூல் அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாகும்.

சுங்க வரி வசூல் 4 சதவீதம் உயர்ந்து ரூ. 12,608 கோடியானது. ஏப்ரல் முதல் டிசம்பர் வரையான காலத்தில் சுங்க வரி வசூல் ரூ. 1,12,670 கோடியாகும். முந்தைய ஆண்டைக் காட்டிலும் 13 சதவீதம் அதிகமாகும்.

2011ம் ஆண்டு நவம்பரில்...தொழில் துறை உற்பத்தி 5.9 சதவீதம் வளர்ச்சி


கடந்த 2011ம் ஆண்டின் நவம்பர் மாதத்தில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி குறியீட்டு எண் (ஐ.ஐ.பி), 5.9 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. அதேசமயம், இது, கடந்த 2010ம் ஆண்டின் இதே மாதத்தில், 6.4 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது என, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2004-05ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு, நாட்டின் தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண் கணக்கிடப்படுகிறது.தற்காலிக புள்ளிவிவரத்தின்படி, தொழில் துறை உற்பத்தி குறியீட்டு எண், கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், 5.1 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டிருந்தது. இது, மறு மதிப்பீட்டில், 4.74 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தயாரிப்பு துறை:கணக்கீட்டு மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி 6.6 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு இதே மாதத்தில் இந்த வளர்ச்சி 6.5 சதவீதம் என்ற அளவில் இருந்தது. தொழில் துறை உற்பத்தி குறியீட்டு எண் கணக்கீடு செய்வதில், தயாரிப்பு துறையின் பங்களிப்பு 75 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
நுகர் பொருட்கள்:நுகர் பொருட்கள் துறையின் உற்பத்தி, 13.1 சதவீதம் என்ற அளவில் மிகச் சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த 2010ம் ஆண்டு இதே மாதத்தில், 0.7 சதவீதம் என்ற அளவில் குறைவாக இருந்தது. மேலும், இதே காலத்தில், நுகர்வோர் சாதன துறையின் உற்பத்தி, 7.2 சதவீதத்திலிருந்து, 11.2 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், மின் துறையின் உற்பத்தி, 14.6 சதவீதம் என்ற அளவில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது.


இது, இதற்கு முந்தைய 2010ம் ஆண்டின் இதே மாதத்தில், 4.6 சதவீதமாக இருந்தது.நுகர்வோர் சாதனங்கள் அல்லாத இதர துறையின் உற்பத்தி, 14.8 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த 2010ம் ஆண்டு இதே மாதத்தில், 4.4 சதவீதம் என்ற அளவில் சரிவடைந்திருந்தது.சுரங்கத்துறை:பல்வேறு துறைகளின் உற்பத்தி மிகவும் அதிகரித்துள்ள நிலையில், சுரங்கம் மற்றும் பொறியியல் துறைகளின் உற்பத்தி எதிர்மறை வளர்ச்சியை கண்டுள்ளன. சென்ற 2010ம் ஆண்டு நவம்பரில், 6.9 சதவீதமாக அதிகரித்து காணப்பட்ட சுரங்கத்துறையின் வளர்ச்சி, சென்ற 2011ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், 4.4 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டுள்ளது.


இது தவிர, சென்ற நவம்பரில், பொறியியல் துறை உற்பத்தி, 4.6 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டுள்ளது. அதேசமயம், கடந்த 2010ம் ஆண்டு இதே மாதத்தில் இத்துறையின் உற்பத்தி, 25.4 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டிருந்தது.அதேசமயம், கணக்கீட்டு மாதத்தில், அடிப்படை பொருட்கள் தயாரிப்பு துறையின் உற்பத்தி, 6.3 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே மாதத்தில், 5.7 சதவீதம் என்ற அளவில் குறைந்து காணப்பட்டது. இடைநிலைப் பொருட்கள் தயாரிப்பு துறையின் உற்பத்தி, இதற்கு முந்தைய ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் (4.3 சதவீதம்), 0.2 சதவீதம் என்ற அளவில் சற்று உயர்ந்துள்ளது.


இது குறித்து மத்திய திட்டக்குழுவின் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா கூறுகையில்," தொழில் துறை உற்பத்தி குறியீட்டு எண் 6 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என்பது ஒரு நல்ல முன்னேற்றத்திற்கான அறிகுறியாக உள்ளது. தொழில் துறை உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சுணக்க நிலை, நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டுடன் (அக்டோபர் -டிசம்பர்) முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது' என்று தெரிவித்தார்.


தற்போது தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண் வளர்ச்சி கண்டுள்ள நிலையில், ரிசர்வ் வங்கி, இம்மாதம் நடைபெற உள்ள நிதிக் கொள்கை குறித்த அதன் ஆய்வு கூட்டத்தில், முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்புள்ளது என, பல பொருளாதார ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதாகவும் அமையும். சென்ற 2011ம் ஆண்டின், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாக குறைந்துள்ளது. இது, முந்தைய ஒன்பது காலாண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக குறைவான வளர்ச்சியாகும்.


பணவீக்கம்:நாட்டின் பொதுப் பணவீக்கம்,கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 9 சதவீதத்திற்கும் அதிகமாகவே இருந்து வருகிறது. பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், ரிசர்வ் வங்கி, சென்ற 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல், இது வரையிலுமாக, முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதத்தை 13 முறை உயர்த்தியுள்ளது. இதனால், வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் பல மடங்கு அதிகரித்துள்ளது.


இதனால், நிறுவனங்கள், விரிவாக்கம் மற்றும் புதிய முதலீடுகளுக்கு, வங்கிகளிடமிருந்து கடன் வாங்குவதை வெகுவாக குறைத்துக் கொண்டுள்ளன. இது, தொழில் துறை உற்பத்தி வளர்ச்சிக்கு இடையூறாக உள்ளது.