விவசாயி......


தங்கம் உற்பத்தி 2 டன் இறக்குமதி 900 டன்

உள்நாட்டில் ஆண்டுக்கு சராசரியாக, இரண்டு டன் தங்கம் உற்பத்தி ஆகிறது. அதேசமயம், இதன் இறக்குமதி ஆண்டுக்கு, 900 டன் என்ற அளவில் உள்ளது


வெளிநாடுகளில், குறைந்தபட்சம் ஆறு மாதம் தங்கி, தாய் நாடு திரும்பும் ஒருவர், உரிய சுங்க வரி செலுத்தி, ஒரு கிலோ தங்கம் கொண்டு வர அனுமதி உள்ளது. கடந்த 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் தங்க இறக்குமதி, 1,067 டன்னாக இருந்தது. இது, கடந்த 2010-11ம் நிதியாண்டில், 969 டன்னாகவும், 2009-10ம் நிதியாண்டில், 850 டன்னாகவும் இருந்தது.


வர்த்தகப் பற்றாக்குறையை குறைக்கும் வகையில், மத்திய அரசு, தங்கம் இறக்குமதி மீதான வரி விகிதங்களை உயர்த்தியது. இதனால், நடப்பு நிதியாண்டில், இதுவரையிலுமாக, தங்க இறக்குமதி, 204 டன் என்ற அளவில் மிகவும் குறைவாக உள்ளது

கம்ப்யூட்டர் விற்பனை 15 சதவீதம் வளர்ச்சி


:நடப்பு 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் கம்ப்யூட்டர் விற்பனை, 1.24 கோடியாக அதிகரிக்கும். இது, முந்தைய நிதியாண்டின், இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, (1.18 கோடி கம்ப்யூட்டர்கள்) 15 சதவீதம் அதிகமாகும் என, தகவல் தொழில்நுட்ப சாதன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சர்வதேச பொருளாதார மந்த நிலையால், பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், நுகர்வோரின் வாங்கும் சக்தி குறைந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால், கம்ப்யூட்டர் விற்பனை மந்தமடைந்துள்ளது.

சென்ற 2011-12ம் நிதியாண்டில், இந்தியாவில், 1.18 கோடி கம்ப்யூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. இது, முந்தைய நிதியாண்டில், மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, (93 லட்சம் கம்ப்யூட்டர்கள்) 16 சதவீதம் அதிகமாகும்.
தாய்லாந்தில் ஏற்பட்ட வெள்ளத்தால், "ஹார்ட் டிஸ்க்' சாதனத்திற்கு அதிக தட்டுப்பாடு காணப்பட்டது. மேலும், பணவீக்கம் அதிகரிப்பு, டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பில் சரிவு போன்ற காரணங்களால், சென்ற நிதியாண்டில், கம்ப்யூட்டர் விற்பனை குறைந்த அளவிலேயே வளர்ச்சி கண்டுள்ளது.

தொலைபேசி பயன்படுத்தும் 96.55 கோடி சந்தாதாரர்கள்


சென்ற ஜூன் மாத முடிவில், மொபைல் சேவை நிறுவனங்கள் 47 லட்சத்து 30 ஆயிரம் புதிய மொபைல் சந்தாதாரர்களை இணைத்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் தொலைபேசி பயன்படுத்துவோர் எண்ணிக்கை 96 கோடியே 55 லட்சத்து 20 ஆயிரமாக உயர்ந்துள்ளது.இதில் மொபைல் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 93 கோடியே 40 லட்சத்து 9 ஆயிரம் ஆகும். தரைவழி இணைப்பு பெற்ற தொலைபேசிகளின் எண்ணிக்கை 3 கோடியே 14 லட்சத்து 30 ஆயிரம் ஆகும். இந்தியாவில் 100க்கு 77 பேர் தொலைபேசி பயன்படுத்துபவர்களாக உயர்ந்துள்ளனர். இந்த தகவல்களை ட்ராய் அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ளது.

ஜூனில் பாரதி ஏர்டெல் நிறுவனம் 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களைப் புதிய சந்தாதாரர்களாக இணைத்துக் கொண்டுள்ளது. ஜூன் முடிவில், இந்நிறுவனத்தின் மொத்த சந்தாதாரர் எண்ணிக்கை 18 கோடியே 73 லட்சமாகும். இரண்டாவது இடத்தில் வோடபோன் நிறுவனம் 12 லட்சத்து 20 ஆயிரம் பேரை புதிதாய் இணைத்துள்ளது. இந்நிறுவனத்தில் ஜூன் மாத இறுதியில் உள்ள சந்தாதாரர் எண்ணிக்கை 15 கோடியே 37 லட்சம்.

இந்த நிறுவனங்களை அடுத்து டாட்டா டெலி சர்வீசஸ் மற்றும் ஐடியா செல்லுலர் நிறுவனங்கள் உள்ளன. உரிமத்தை இழந்த பின்னரும், யூனிநார் நிறுவனம் 5 லட்சம் பேரை புதிய சந்தாதாரர்களாகப் பெற்றுள்ளது. ஜூன் மாதத்தில் 41 லட்சத்து 60 ஆயிரம் பேர், எண்ணை மாற்றாமல் சேவை நிறுவனத்தை மாற்ற விண்ணப்பித்தனர்.

பங்கு சந்தைகளில் அன்னிய முதலீடு


நடப்பு ஆகஸ்ட் ஒன்று முதல் 10ம் தேதி வரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்கு சந்தைகளில் மேற்கொண்ட நிகர முதலீடு, 4,794 கோடி ரூபாய் என்றளவில் உள்ளது என,"செபி' அமைப்பு தெரிவித்துள்ளது.
விற்பனை:மதிப்பீட்டு காலத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், 17,544 கோடி ரூபாயை பங்குகளில் முதலீடு செய்துள்ளன. அதேசமயம், 12,750 கோடி ரூபாய் மதிப்பிற்கு, பங்குகளை விற்பனை செய்துள்ளன. ஆக, இந்நிறுவனங்களின் நிகர முதலீடு, 4,794 கோடி ரூபாயாக உள்ளது.

கடந்த ஜூலை மாதம், அன்னிய நிதி நிறுவனங்கள், பங்கு சந்தைகளில், 10,273 கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தன. அதேசமயம், சென்ற ஜூன் வரையிலான முதல் காலாண்டில், 1,957 கோடி ரூபாயை விலக்கி கொண்டன.


நடப்பு ஆகஸ்ட் ஒன்று முதல் 10ம் தேதி வரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள், கடன் பத்திரங்களில் மேற்கொண்டிருந்த முதலீட்டிலிருந்து, 143 கோடி ரூபாயை விலக்கி கொண்டுள்ளன. இதே காலத்தில், மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண், 321 புள்ளிகள் அல்லது 1.8 சதவீதம் உயர்ந்துள்ளது.

கடன் பத்திரங்கள்:நடப்பாண்டில், இதுவரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள், ஒட்டு மொத்த அளவில், பங்கு சந்தைகளில், 57,060 கோடி ரூபாயும், கடன் பத்திரங்களில், 24,109 கோடி ரூபாயும் முதலீடு செய்துள்ளன.

மதிப்பீட்டு காலத்தில், "செபி' அமைப்பிடம், பதிவு செய்து கொண்ட, அன்னிய நிதி நிறுவனங்களின் எண்ணிக்கை, 1,767லிருந்து, 1,756 ஆக குறைந்துள்ளது. அதேசமயம், பதிவு செய்து கொள்ளப்பட்ட துணை கணக்குகளின் எண்ணிக்கை, 6,278லிருந்து, 6,362 ஆக உயர்ந்துள்ளது.