பணவீக்க உயர்வு

ஆசிய நாடுகளில் இந்தியாவில் தான் பணவீக்கம் அதிகம் என மத்திய புள்ளியியல் துறை தகவல் வெளியிட்டுள்ளது. ஆசியாவில் மட்டுமின்றி உலகிலேயே அதிக பணவீக்க விகிதத்தை கொண்ட நாடும் இந்தியா தான்.

கடந்த ஆண்டில் நாட்டின் வளர்ச்சி குறித்த புள்ளி விபரத்தை மத்திய புள்ளியியல் துறை அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதில், ஆசியாவிலேயே 3வது பெரிய பொருளாதார நாடாக கருதப்படுவது, இந்தியா. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் வளர்ச்சி குறைவாக இருப்பதுடன், விலைவாசி பலமடங்கு அதிகரித்துள்ளது. இந்த குறைவான வளர்ச்சி மற்றும் அதிகளவிலான பணவீக்கம், மத்திய வங்கியின் கொள்கைகளில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு தொழில்துறை வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், நடப்பு ஆண்டின் அக்டோபர் மாதத்தில் வளர்ச்சி விகிதம் வெகுவாக சரிவடைந்துள்ளது. கடந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தில் 8.4 சதவீதமாக இருந்த தொழில்துறை வளர்ச்சி, நடப்பு ஆண்டின் அக்டோபர் மாதத்தில் 1.8 சதவீதமாக சரிவடைந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் 2 சதவீதத்திற்குள் குறைவான வளர்ச்சியே இருந்துள்ளது.



குறைந்த வருமானம், மக்கள் தொகை நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் கிராமப்புறங்களில் பணவீக்க விகிதம் 11.7 சதவீதமாகவும், நகர்புறங்களில் 10.5 சதவீதமாகவும் உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி பெற்றுள்ள தோல்வி காரணமாக சில்லரை விலை பணவீக்கம் அதிகரித்துள்ளது, நாட்டின் பொருளாதாரத்தில் மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்ததால், காங்கிரஸ் கட்சி மீது மக்கள் கொண்ட வெறுப்பின் காரணமாகவே அக்கட்சிக்கு எதிராக வாக்காளர்கள் ஓட்டளித்துள்ளதற்கு காரணம். மத்திய வங்கியின் ஆதரவு மண்டலத்தை விட பணவீக்கம் கடுமையாக அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். அதே சமயம் நாட்டின் வளர்ச்சி குறைந்த அளவில் உள்ளதால், கொள்கை அளவிடுதலை கவனமாக கையாள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்காக சில வர்த்தக பரிமாற்ற முறைகளை கையாண்ட வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பணவீக்க உயர்வு குடும்பதாரர்களின் பட்ஜெட்டை கடுமையாக பாதித்து வருகிறது. ஆனால்,பணவீக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக கூறும் மத்திய அரசு, சந்தை சட்டங்களையும் சீரமைக்க மாநில அரசுகள் தவறியதே பணவீக்க உயர்விற்கு காரணம் என மாநில அரசுகளை குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி தனது புதிய பணக் கொள்கையை அடுத்த வாரம் வெளியிட உள்ளது. இதனால் நெருக்கடியை சமாளிக்க மத்திய வங்கி வட்டிவிகிதத்தை அதிகரிக்க உள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 9.9 சதவீதமாக இருந்த தொழில்துறை உற்பத்தி, நடப்பு ஆண்டு அக்டோபரில் 2 சதவீதமாக குறைந்துள்ளது. நிலக்கரி சுரங்க உற்பத்தியும் 3.5 சதவீதத்தில் இருந்து 0.2 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மின்துறை வளர்ச்சி மட்டும் 1.3 சதவீதம் அதிகரித்துள்ளது. 

மார்க் ஃபேபர் (MARC FABER)

 #முதலீட்டு ஆலோசகர், ஃபண்ட் மேனேஜர், எழுத்தாளர், பேச்சாளர் என இவருக்கு பல முகங்கள் உண்டு.

#ஸ்விட்சர்லாந்தில் பிறந்த இவர் 24 வயதில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் (ஜூரிச் பல்கலைகழகத்தில்) பெற்றவர்.

#மாற்று சிந்தனையாளர் (contrarian) என முதலீட்டாளர்கள் இவரை அழைப்பார்கள்.

#The Gloom, Boom and Doom என்ற மாதாந்திர மாற்று முதலீட்டு அறிக்கையை இவர் வெளியிடுவார். மேலும் முன்னணி பத்திரிகைகள் மற்றும் கருத்தரங்களில் தொடர்ந்து பேசி வருகிறார்.

#Tomorrow's Gold, 'Asia's Age of Discovery உள்ளிட்ட சில புத்தகங்களையும் எழுதி இருக்கிறார். இந்த புத்தகங்கள் அமேசான் இணையதளத்தில் பல வாரங்களாக விற்பனையில் முன்னணியில் இருந்தன. மேலும் கொரியா, தாய் மற்றும் ஜெர்மன் ஆகிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

#1987ல் அமெரிக்க பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவு, 1990ல் ஜப்பானில் ஏற்பட்ட சரிவு, 1997/98ல் ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவு போன்றவற்றை கணித்தவர் மார்க். 

அனலிஸ்ட்களுக்கு புதிய விதிமுறை: செபி



பங்குச்சந்தை வர்த்தகத்தில் அனலிஸ்ட்களின் பங்கு முக்கியமானது. அவர்கள் கொடுக்கும் அறிக்கை சாதகமாக இருக்கும் பட்சத்தில் அந்த நிறுவனத்தின் பங்குகள் விலை உயரும். ஒரு வேளை பாதகமான அறிக்கை வரும் பட்சத்தில் பங்குகளின் விலை சரியும் அபாயமும் இருக்கிறது. இதைத் தடுப்பதற்காக புதிய வழிகாட்டு நெறிமுறையினை செபி வெளியிட்டிருக்கிறது.

இதன்படி வெளிநாட்டு புரோக்கிங் நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களை பற்றி கருத்து கூறுவதற்கு புதிய விதிமுறைகளை கொண்டுவரப்போகிறது செபி. வெளிநாட்டு நிறுவனங்களின் துணை நிறுவனம் இந்தியாவில் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய பங்குகளை பற்றி எந்தவிதமான கருத்துகளையும் கூற முடியாது.

ஒருவேளை கருத்து கூற வேண்டும் என்றால் இந்தியாவில் ஓர் துணை நிறுவனத்தை அமைத்து, அந்த நிறுவனம் மூலம் விண்ணப்பித்த பிறகு தான் பங்குச்சந்தை கணிப்புகளைக் கூற முடியும்.

வெளிநாட்டு புரோக்கரேஜ் நிறுவனங்கள் இது போல சில அறிக்கைகளை வெளியிட்டு அதன்மூலம் பங்குகளின் விலை சரிந்ததால் செபி இத்தகைய நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

கனடாவை சேர்ந்த வெரிட்டாஸ் நிறுவனம் டி.எல்.எஃப்., ரிலையன்ஸ், இந்தியாபுல்ஸ் ஆகிய நிறுவனங்களை பற்றி கூறிய கருத்துகள், அந்த பங்குகளின் விலையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தின. இதன் காரணமாகவே செபி இத்தகைய நடவடிக்கையை எடுத்தது.

மேலும் சர்வதேச பங்குச்சந்தை அமைப்பும் (ஐ.ஓ.எஸ்.சி.ஓ) பங்குச்சந்தை அனலிஸ்களுக்கு விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று செபியிடம் பரிந்துரை செய்தது. அந்த பரிந்துரையும் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் செபி இத்தகைய நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

புதிய வழிகாட்டு நெறிமுறையின் படி, முறையான சான்றிதழ் இல்லாமல் ஒருவரும் பங்குச்சந்தை அனலிஸ்டாக இருக்க முடியாது. அதே சமயத்தில் அனலிஸ்ட்கள் முதலீட்டாளர்களின் நம்பிக்கை குலைக்கும் வகையிலோ, அல்லது அந்த நம்பிக்கையை தவறாக பயன்படுத்தாமல் இருப்பதற்காக கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறது.



மேலும் அனலிஸ்ட்கள் தங்களது முதலீடுகளை, நேரடி மற்றும் மறைமுக வர்த்தக நடவடிக்கைகள் உள்ளிட்ட தகவல்களை வெளியே சொல்ல வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறது.

மேலும் ஒர் அனலிஸ்ட் தான் பரிந்துரை செய்த அல்லது நிறுவனம் பரிந்துரை செய்த பங்குகளில் 30 நாள்களுக்கு முன்பாகவோ அல்லது பரிந்துரை வெளியான 5 நாட்களுக்கு உள்ளாகவோ அந்த பங்கில் எந்தவிதமான பரிவர்த்தனை செய்யவும் அனுமதி இல்லை. 

ஜார்ஜ் சோரஸ் - இவரைத் தெரியுமா?




                                                          ஜார்ஜ் சோரஸ்

 #ஹங்கேரியில் பிறந்த இவர், நாஜிக்களின் காலத்தில் அங்கிருந்து வெளியேறினார். இப்போது அமெரிக்காவில் இருக்கும் இவருக்கு, உலகின் ஹெட்ஜ் ஃபண்ட் நிறுவனத்தின் தலைவர், சமூகசேவையாளர் என பல முகங்கள் இவருக்கு இருக்கிறது.

#லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கானாமிக்ஸில் படித்தவர். படித்து பிறகு அமெரிக்காவில் உள்ள எப்.எம்.மேயர் புரோக்கரேஜ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.

#அதன்பிறகு சில நிறுவனங்களில் வேலை செய்த சோரஸ் 1973-ம் ஆண்டு சொந்தமாக தன் பெயரில் ஒரு ஹெட்ஜ் ஃபண்ட் நிறுவனத்தை ஆரம்பித்தார்.

#1992-ம் ஆண்டு இங்கிலாந்து பொருளாதாரத்தில் பெரிய பிரச்னை ஏற்பட்டது. அந்த வீழ்ச்சியை பயன்படுத்தி பேங்க் ஆஃப் இங்கிலாந்தை உடைத்தவர் என்றும் இவரை சொல்லுவார்கள்.

#அந்த வீழ்ச்சியை பயன்படுத்தி 100 கோடி டாலர் சம்பாதித்தார். வரலாற்றில் அது கருப்பு புதன்கிழமை என்று சொல்லுவார்கள்.

#Financial Turmoil in Europe and the United States, The Alchemy of Finance உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட புத்தங்களை எழுதி இருக்கிறார்.

#‘‘மக்களிடையே சென்று சேரவேண்டும் என்பதற்காகவோ, குற்ற உணர்ச்சியிலோ நான் சமூக சேவை செய்ய வரவில்லை. என்னால் பணம் செலவழிக்க முடிகிறது. அதனால் செய்கிறேன்” என்று சொன்னவர் இவர். 

ஜோசியம்

கிருஷ்ண தேவராயர் ஒருமுறை எதிரியைத் தாக்கப் படையோடு புறப்பட்டுப் போனார். ஒரு ஆற்றங்கரையைக் கடக்க வேண்டிய நேரத்தில், அரசவை ஜோசியர், “மன்னா, இன்றைக்கு நாள் நன்றாக இல்லை. அடுத்த திங்கள்கிழமை போருக்குப் போனால் வெற்றி நிச்சயம்” என்று சொன்னார். கிருஷ்ணதேவராயர் குழம்பினார். அவ்வளவு நாட்கள் கொடுத்தால், எதிரி உஷாராகிவிடுவான். அவன் எதிர்பாராத நேரத்தில் உடனே தாக்கினால்தான் வெற்றி. ஆனால், ஜோசியர் சொன்ன பின் சந்தேகம் வந்துவிட்டது.

தெனாலிராமனிடம் ஆலோசனை கேட்டார். தெனாலிராமன் ஜோசியரை அழைத்தான். “எல்லோருக்கும் ஆருடம் சொல்கிறீர்களே, நீங்கள் இன்னும் எத்தனை வருடம் உயிரோடு இருப்பீர்கள் என்று சொல்ல முடியுமா?” என்று கேட்டான். “இன்னும் இருபது வருடங்கள் வாழ்ந்திருப்பேன்” என்றார் ஜோசியர். தெனாலிராமன் சடக்கென்று வாளை உருவி அவர் கழுத்தில் பதித்து, “இந்த விநாடியே உங்கள் ஆரூடத்தை என்னால் பொய்யாக்க முடியுமா, முடியாதா?” என்று கேட்டான். ஜோசியரின் விழிகள் அச்சத்தில் பிதுங்கின. “முடியும்.. முடியும்” என்று அலறினார்.

 “அவ்வளவுதான் மன்னா ஜோசியம்! உங்களுக்கு எதிரான எந்த ஜோசியத்தையும் உங்களால் பொய்யாக்க முடியும்” என்று புன்னகைத்தான் தெனாலிராமன். கிருஷ்ண தேவராயர் ஆற்றைக் கடந்தார். எதிரியை வெற்றி கொண்டார். நீங்கள் தீர்மானமாக இருந்தால், கோள்களால் உங்களை எதுவும் செய்ய முடியாது. வீண் சந்தேகங்களை விலக்கி, உங்கள் மீது நம்பிக்கை வைத்துத் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படுங்கள். தானாகக் கனிந்து வரும் வெற்றிக்கனி!