பொன்மொழிகள்

"பணக்காரனாக ஆவதற்கு பணத்தைச் சேர்த்து வைக்க வேண்டியதில்லை.
தேவைகளைக் குறைத்துக் கொண்டாலே போதும். " -ஸ்பெயின்.


"போலியான நண்பனாக இருப்பதைவிட, வெளிப்படையான எதிரியாக இருப்பது மேல்." -இங்கிலாந்து.

"தாகத்தால் தவிக்கும் ஒருவனுக்கு ஒரு சொட்டுத் தண்ணீருக்கு முன்னால் ஓராயிரம் முத்துக்கள் மதிப்புள்ளது ஆகாது." -பாரசீகம்.

"செழிப்பானபண்ணையிலிருந்துகுதிரையைவாங்கு:ஏழை வீட்டிலிருந்து பெண்ணை எடு." -எஸ்டோனியா.

"மனிதர்கள் நேசமாயுள்ள இடத்தில் தண்ணீர் கூட இனிப்பாய் இருக்கும்." - சீனா.

"நாய் குரைக்கிற போதெல்லாம் நீங்கள் தாமதித்தீர்களேயானால், நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லவே முடியாது." - அராபி.



"ஒருவன் ஆயிரம் மைல்கள் நடந்தாலும், ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்துத்தான் அத்தனை மைல்கள் நடக்க முடிந்ததென்பதை மறவாதீர்கள்." - சீனா.

"பக்தியோடு பிரார்த்தனை செய். ஆனால் சுத்தியலை பலமாய் அடி." -இங்கிலாந்து.

"உன் அண்டை வீட்டுக்காரனை நேசி. ஆனால் உன் வீட்டு வேலியை எடுத்து விடாதே." -ஜெர்மன்.

"ஆசை பேராசையாகவும், அன்பு வெறியாகவும் மாறும் போது அமைதி விலகி எங்கோ போய்விடுகிறது."-ஜப்பான்

திருடி

சிறுவன் ஒருவன் ஒரு கூடையில் நாவல் பழங்களை வைத்து தெருவில் விற்றுக் கொண்டு வந்தான்.ஒரு பெண் அவனை அழைக்கவும் அவள் வீட்டிற்கு வந்து கூடையை இறக்கினான்.அந்தப்பெண் ,''நான் வீட்டிற்குள் எடுத்துச் சென்று நல்ல பழங்களைப் பொறுக்கி எடுத்துக் கொள்ளவா?''என்று கேட்டாள்.சிறுவனும் சம்மதிக்கவே அவள் கூடையை வீட்டினுள் எடுத்துசென்று நல்ல பழங்களாகப் பார்த்து பொறுக்கி எடுத்தாள் .

 பையன் வீட்டிற்குள் செல்லவில்லை.வெளியே இருந்தமரத்தில் அமர்ந்திருந்த பறவைகளைப் பார்த்து மகிழ்ச்சியுடன் விசில் அடித்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து அந்தப் பெண் வெளியே வந்து கூடையை அவனிடம் கொடுத்து விட்டுத் தான் எடுத்த பழங்களுக்கு விலை கேட்டாள்.

அவனும் எடை போட்டு விலை சொன்னான்.பணத்தைக் கொடுத்த அந்தப் பெண் கேட்டாள்,''ஏன் தம்பி,நான் உள்ளே கூடையை எடுத்து சென்ற போது நீ உள்ளே வரவில்லை.நான் அதிகமாகப் பழங்களை எடுத்திருந்தால் என்ன .செய்வாய்?உனக்கு நஷ்டம் ஆகாதா?நான் உன்னை ஏமாற்ற மாட்டேன் என்று உனக்கு எப்படித் தெரியும்?''சிறுவன் சொன்னான்,''அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை.நீங்கள் அவ்வாறு அதிகம் எடுத்திருந்தால் எனக்கு நஷ்டம் சில பழங்களே.ஆனால் உங்களுக்கு திருடி என்ற பட்டம் கிடைக்குமே, அந்த நஷ்டத்தை ஏற்க நீங்கள் தயாரா?''அந்தப் பெண் வாயடைத்து நின்றாள்

பார்த்து ரசிக்க

மோடி, குஜராத், வளர்ச்சி





வரலாற்றில் வித்தியாசமான தேர்தல்

இந்திய வரலாறு மிக வித்தியாசமான ஒரு தேர்தலை எதிர்கொள்கிறது. இதுவரையிலான 15 மக்களவைத் தேர்தல்களும், இந்திய மக்கள் முன் எத்தனையோ பேசுபொருள்களை முன்னிறுத்தியிருக்கின்றன. சாதனைகளும் வாக்குறுதிகளும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள், ஊழல்களும் அதிகார துஷ்பிரயோகங்களும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள், மரணங்களும் தியாகங்களும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள், தனிக்கட்சி ஆட்சியும் நிலையான அரசும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள், கூட்டாட்சியும் அனைவருக்குமான வளர்ச்சியும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள்... எல்லாத் தேர்தல்களிலுமே குறைந்தபட்சம் மக்கள் முன் இரு தேர்வுகள் முன்னிறுத்தப்பட்டது உண்டு: இந்தக் கட்சியா, அந்தக் கட்சியா அல்லது இந்தக் கூட்டணியா, அந்தக் கூட்டணியா?

முதல்முறையாக மக்களவைத் தேர்தலை அதிபர் தேர்தல்போல எதிர்கொள்கிறது இந்தியா. பிரச்சாரத்தில் கட்சிகளின் பெயர்கள் அடிவாங்கிவிட்டன. இன்னும் சொல்லப்போனால், ஒரேயொரு மனிதரும் அவர் முன்னிறுத்தும் முழக்கமும்தான் இன்றைய இந்தியாவின், இந்தத் தேர்தலின் பேசுபொருள்: மோடி - குஜராத் - வளர்ச்சி.

நாட்டின் மிகப் பெரிய கட்சியான காங்கிரஸ் மோடிக்குப் பதில் அளிப்பதை மட்டுமே தேர்தல் பணியாகக் கொண்டிருக்க… ஏனைய கட்சிகளோ, மோடியை நோக்கிக் கேள்வி எழுப்புவதையே தேர்தல் பணியாகக் கொண்டிருக்கின்றன. ஆக, வாக்காளர்கள் முன் ஒரேயொரு கேள்விதான் எங்கும் தொக்கிநிற்கிறது: மோடி - குஜராத் - வளர்ச்சி வேண்டுமா; வேண்டாமா?

மக்களிடம் இப்படி ஒரு கேள்வி தொக்கிநிற்கிறது என்றால், நாடு முழுவதும் உள்ள ஊடகங்களிலும் இப்போது இதுதான் முக்கியமான விவாதம் - குஜராத்தில் உண்மையான வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறதா, இல்லையா? அது உண்மையாகவே ஒரு நல்ல முன்மாதிரிதானா, இல்லையா? மக்கள் உண்மையாகவே எப்படி இருக்கிறார்கள்? எது குஜராத்தில் மீண்டும் மீண்டும் மோடியைப் பதவியில் அமர்த்துகிறது?



மோடி செய்ததும் செய்யாததும்

இந்தச் சுற்றுப்பயணத்தில் இந்த மாபெரும் கேள்விக்கும் விவாதத்துக்கும் நானும் பதில் தேடினேன். குஜராத் அரசுத் தரப்பினர் சாதனைகளாகச் சொன்ன - அவர்கள் நிறைவேற்றியிருக்கும் பல்வேறு திட்டங்களைப் பார்க்க அலைந்தேன். அந்தத் திட்டங்கள் நன்மை - தீமைகளை அளவிட ஏகப்பட்ட குறிப்புகள், புள்ளிவிவரங்களைச் சேகரித்தேன். ஏராளமான மக்களிடம் கருத்துகள் கேட்டேன். சரி, உண்மை நிலவரம் என்ன?

குஜராத்தில் மோடி முன்னோடியான திட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறாரா? நிச்சயமாகக் கொண்டுவந்திருக்கிறார் - எப்படி கேரளத்திலும் தமிழகத்திலும் பிஹாரிலும் சில முன்னோடியான திட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றனவோ அப்படியே குஜராத்திலும் முன்னோடியான சில திட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. ஆனால், குஜராத்துக்கு வெளியே அவை ஊதிப் பெருக்கப்படுகின்றன. பல விஷயங்களில் துளியும் உண்மை இல்லாமல் மோடி கொண்டாடப்படுகிறார். ஒரு உதாரணம்: குஜராத் மதுவிலக்கு மாநிலமாக இருப்பதற்கு மோடி கொண்டாடப்படுவது. உண்மை என்னவென்றால், குஜராத் தனி மாநிலமாக உருவாக்கப்பட்ட 1960 முதலே அது மதுவிலக்கு மாநிலம். இதைச் செய்தது காங்கிரஸ் அரசாங்கம். உண்மையில் மோடி ஆட்சியில் மது கள்ளச் சந்தையில் நிறையவே கிடைக்கிறது. இரட்டை விலையில் விற்கிறார்கள். சமீபத்திய உதாரணம், நாட்டில் அதிக அளவில் ரூ.12.57 கோடி மதிப்புடைய மது, தேர்தல் ஆணையத்தால் குஜராத்தில் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது. இப்படி நிறைய அடுக்கலாம். ஆனால், வெற்றிகரமாக அந்த மாயையை நிறுவியிருக்கிறார்கள்.

சரி, இது மாயை என்றால், உள்ளூரில் எடுபடாதே? பின் எப்படி குஜராத்தில் மோடி தொடர்ந்து வெல்கிறார்? குஜராத்திலிருந்து புறப்படும்போது எடுத்த ஒரு புகைப்படம் அந்த உண்மையை வெளிப்படுத்தும் என்று நம்புகிறேன்.

உண்மையின் கதவுகள்

ஊரெல்லாம் சுற்றிவிட்டு, அகமதாபாத் திரும்பியபோதுதான் அதைக் கவனித்தேன். சில வீதிகளின் நுழைவாயில்களில் பெரிய பெரிய இரும்புக் கதவுகளை அமைத்திருந்தார்கள். அந்த வீதிகளின் புழுதி மண் சாலைகள் நாம் வெளியில் கேட்கும் குஜராத்தின் வளர்ச்சி கோஷங்களோடு எந்த வகையிலும் பொருந்தாதவை. மனதில் வித்தியாசமாகப் படவும், ஓரிடத்தில் காரை நிறுத்தச் சொல்லி இறங்கினேன். அகமதாபாதின் மையத்தை ஒட்டியிருக்கும் அந்தப் பகுதியின் பெயர் சோனி கே சால். மோடியின் தொகுதியான மணிநகருக்கு மிக அருகில் இருக்கும் பகுதி. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதி. “வீதியின் நுழைவாயிலில் ஏன் இரும்புக் கதவுகளை அமைத்திருக்கிறார்கள்?” என்று அங்குள்ளவர்களிடம் விசாரித்தபோது, கிடைத்த அதிரவைக்கும் பதில் இது: “பழங்கால முறைதான். கலவரம் ஏற்பட்டால் கதவைப் பூட்டிவிட்டுப் பதுங்க.”

அருகருகே இருந்த வீதிகளில் நுழைந்து சென்றபோது ஒரு விஷயத்தைக் கவனிக்க முடிந்தது. பெரும்பாலான வீடுகளில் நிலை, கதவுகள், ஜன்னல்கள் யாவும் இரும்பாலேயே அமைக்கப்பட்டிருந்தன. “ஏன் மரங்களைப் பயன்படுத்துவது இல்லையா?” என்ற என் அடுத்த கேள்விக்குக் கிடைத்த பதில் நிலைகுலையச் செய்தது. “கலவரத்தின்போது தீயை இது கொஞ்சமாவது தாக்குப்பிடிக்கும் இல்லையா? இங்கே கலவரங்களின்போது தீப்பந்தங்கள்தான் வீட்டுக்குள் முதலில் வரும். அப்புறம் என்ன வெட்டினாலும் கூறுபோட்டாலும் சரி… எரித்தால்தான் அவர்களுக்கு வெறி அடங்கும்.”

எனக்கு கோத்ராவும் நரோடா பாட்டியாவும் மாறி மாறி நினைவுக்கு வந்தன. கோத்ராவில் ரயில் பயணிகளைத் துடிக்கத் துடிக்கத் தீ வைத்துதான் அழித்தார்கள். நரோடா பாட்டியாவில் ஒன்பது மாதக் கர்ப்பிணியான கௌஸர் பானுவின் வயிற்றை வாளால் கிழித்து அந்தச் சிசுவை வெளியே எடுத்தவர்கள் தரையில் போட்டு அதை மிதித்தார்கள்; அப்போதும் ஆத்திரம் அடங்காமல், அதன் மீது எண்ணெயை ஊற்றி எரித்தார்கள்.

அங்கிருந்து வெளியே வந்தேன். கார் ஓட்டுநர் ஒரு இந்து. “சார்… இந்துக்களுக்கும் பயம் உண்டு சார். முஸ்லிம்கள் சுற்றி அதிகமாக வாழும் இடங்களில் இந்துக்களும் இப்படிப் பாதுகாப்புக்கு வீதி நுழைவாயிலில் இரும்புக் கதவுகள் போட்டுக்கொள்வது உண்டு” என்று சொல்லி ஓர் இடத்தைக் காட்டினார். பின்னர் சொன்னார்: “இந்த பயம்தான் சார் உண்மையில் குஜராத்தை ஆட்சி செய்கிறது. இரு தரப்பையும் வெவ்வேறு வகைகளில்.”

கார் அகலமான ஒரு சாலையில் பாய்ந்து செல்ல ஆரம்பித்தபோது, எனக்கு நடிகை நந்திதா தாஸ் ஒரு பேட்டியில் ‘மோடி - வளர்ச்சி - குஜராத்' தொடர்பான கேள்விக்கு அளித்திருந்த பதில் ஞாபகத்துக்கு வந்தது. அந்தப் பேட்டியில் நந்திதா தாஸ் இப்படிக் கூறியிருப்பார்: “ஜெர்மனியின் மிகச் சிறந்த சாலைகள் ஹிட்லர் ஆட்சியில் அமைக்கப்பட்டவை. ஜெர்மனியின் மிகச்சிறந்த மருத்துவ மனைகளும் அப்போதுதான் கட்டப்பட்டன. ஆனால், ஹிட்லரை நாம் யாரும் வளர்ச்சிக்காக நினைவுகூர்வதில்லை!”


From: the hindu-tamil 

பிச்சைக்காரன்

ஒரு புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தனது கைப்பை நிறைய பென்சில்களை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான். ஒரு கணவான் அந்தவழியாகச் சென்றபோது 5 ரூபாய் நாணயத்தை பிச்சைக்காரனின் திருவோட்டில் போட்டார். பிறகு புகைவண்டியில் ஏறி அமர்ந்தார்.

அவரது மனதில் ஒரு கருத்து உதித்தது. எழுந்து வேகவேகமாக அதே பிச்சைக்காரனிடம் சென்று, “அவனது பையிலிருந்த பென்சில்களை எடுத்துக்கொண்டு 5 ரூபாய்க்குச் சமமான பென்சில்களை எடுத்துக்கொள்கிறேன். என்ன இருந்தாலும் நீயும் தொழில் செய்கிறாய் அல்லவா?”, என்று கூறிவிட்டு புகைவண்டியில் தனது இருக்கைக்குத் திரும்பினார்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த கணவான் ஒரு விருந்தில் கலந்துகொள்ளச் சென்றார். அந்த விருந்தில் 6 மாதங்களுக்கு முன்னாலே இரயில்நிலையத்தில் பிச்சையெடுத்துக்கொண்டு இருந்தவனும் அமர்க்களமான கோட் மற்றும் டை சகிதமான உடையில் கனகச்சிதமான கணவானாக விருந்தில் பங்குகொள்ள வந்து இருந்தான். அவன் இந்தக் கணவானை அடையாளம் கண்டுகொண்டு இப்படிக்கூறினான்.

“அன்பரே.. நீங்கள் என்னை மறந்து போகியிருக்கலாம். ஆனால் நான் உங்களால்தான் இப்படி நல்ல நிலைமைக்கு வந்து இருக்கிறேன். நான் நல்ல நிலைமைக்கு வருவதற்கு நீங்கதான் காரணம்.” அந்த கோட் சூட் வாலிபன் கணவானிடம் பழைய நிகழ்வுகளை நினைவூட்டினான்.

கணவான், “எனக்கு நினைவுவந்துவிட்டது. இப்போது என்ன செய்கிறாய். உடைகளிலும் நல்ல மாற்றம் தென்படுகிறது, என்னப்பா?”.  என்று கேட்டார்

கோட் சூட் வாலிபன் சொன்னான், “நீங்கள்தான் என்னுடைய மாற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் காரணம். என்னுடைய வாழ்நாளிலே உங்களை மறக்கமுடியாது. என் வாழ்க்கையில் என்னை ஒரு மனிதனாக மதித்த முதல் மனிதர் நீங்கள்தான். 5 ரூபாயை எனது திருவோட்டில் இட்டபின் சிறிது நேரத்த்திற்குப் பிறகு வந்து அந்த ரூபாய்க்குச் சமமான பென்சில்களை என்னிடமிருந்து பெற்றுச் சென்றீர்கள்”.

“எனக்குள் ஒழிந்திருந்த வியாபாரி அப்போதுதான் எனக்கே தெரியவந்தான். அதுவரையில் பிச்சையெடுத்துத் திரிந்த நான் அந்த ஒரு நிமிடத்தின் தாக்குதலில் ஒரு வியாபாரியாக உருவெடுத்து உழைக்க ஆரம்பித்தேன்”.

“அந்த ஒரு நிமிடத்துக்கு முன்னர்வரையில் சோம்பேறியாக அழுக்காக புகைவண்டி நிலையத்தின் பிச்சைக்காரர்களின் வரிசையில் ஒருவனாக யாராலும் மதிக்கப்படாத, உருப்படாதவனாக இருந்த நான் உங்கள் நடவடிக்கையால் திருந்தினேன்.

என்னுள்ளே சாக்ரடீஸின் கொள்கைகளைத் தூண்டிவிட்டவர் நீங்கள்தான். பிறகுதான் சிந்திக்க ஆரம்பித்தேன். “நான் யார்? எனது கொள்கை என்ன? எதற்காகவோ பிறந்துவிட்டேன். ஆனால் சாகும்போதாவது எதையாவது சாதித்துவிட்டு சாகலாமே. என முடிவெடுத்தேன். பிச்சையெடுப்பதை நிறுத்தி எனது புதிய வாழ்க்கையை ஆரம்பித்தேன். நான் உங்களுக்கு நன்றி கூறுவதற்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். நன்றிகள் பலகோடி அய்யா”, என்றான்.

அனைவருக்குள்ளும் ஏதாவது ஒரு திறமை ஒளிந்திருக்கும். அதை சரியான நேரத்தில் பயன் பயன்படுத்தினால் வாழ்கையில் முன்னேறலாம்!