பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஏற்ற தருணமா?

 எந்த ஒரு வாய்ப்புமே நம் வீட்டுக் கதவை தானாக வந்து தட்டாது. நம் கண்களையும் காதுகளையும் எப்போதும் அலர்ட்டாக வைத்திருந்தால் அந்த வாய்ப்பை உணர்ந்து நாம் பயன் பெற முடியும். இந்த ஆண்டு தொடங்குவதற்கு முன்பு, நம்முடைய பங்குச் சந்தை கடந்த 6 வருடங்களாக எந்த ஒரு ஏற்றத்தையும் சந்திக்கவில்லை. அதனால் பெரும்பாலோருக்கு இந்த முதலீட்டில் நம்பிக்கை இல்லை.

அதேசமயம் நாம் தேர்தலை சந்திக்கும் தருணம், நிறைய எதிர்பார்ப்புகள், அதனால் வரக்கூடிய வாய்ப்புகளைப் பற்றி ஒரு தடவை யோசித்திருந்தால், இந்த 6 மாதங்களில் 30% ரிடர்ன்ஸ் வரை எளிதாகப் பயன் பெற்றிருக்கலாம்.

இது, பங்குச் சந்தை வரும் காலங்களில் மேலே செல்லப் போவதற்கான ஒரு முன்னோட்டம்தான். ஆனால் பலருக்கு இது முன்னோட்டமாகத் தோன்றாமல் இதுதான் முடிவோ என பயந்து பணத்தை வெளியில் எடுத்தும் இன்னும் சிலர் சந்தை பழைய நிலைக்குத் திரும்ப வரும், அப்போது முதலீடு செய்து கொள்ளலாம் என்றும் நினைக்கிறார்கள்!

சந்தை கரடியின் பிடியிலிருந்து இப்போது காளையின் சீற்றத்துக்கு வந்துள்ளது. ஏப்ரல் 1, 2003 ல் மும்பை சந்தையின் குறியீட்டு எண் 3,081, ஜனவரி 7, 2008 ல் 20,813. 5 வருடத்திற்கும் குறைவான கால அவகாசத்திலேயே 6.75 மடங்கு அதிகரித்துள்ளது. வரும் காலங்களில் 3 முதல் 4 மடங்கு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

பலர் ஒரு பங்கை வாங்கும் போதோ அல்லது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுத் திட்டத்தை வாங்கும்போதோ குறைந்த NAV இருந்தால் ரிஸ்க் குறைவு என்று நினைக்கிறார்கள். இதை விற்ற முகவர்களும் முன்பு உங்களுக்கு நிறைய யூனிட்ஸ் அல்லது பங்கு கிடைக்கும் என்று கூறியே விற்று விட்டார்கள். நாம் யூனிட்டையோ அல்லது பங்கையோ வைத்து எதுவும் செய்யப் போவதில்லை, அதனால் அது அதிகமாக இருக்கிறது என்று சொல்லிப் பயனில்லை. ஒருவர் கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலம் வைத்திருப்பதைவிட, ஒரு கிரவுண்ட் வீட்டு மனை நகரத்தில் வைத்திருப்பது எவ்வளவோ பெரியது!


நம் எல்லோருக்கும் பரிச்சயமான ஒரு நிறுவனம் MRF டயர்ஸ். இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ஏறக்குறைய 5 வருடம் முன்பாக அதாவது ஜூலை 13ம் தேதி 2009ம் ஆண்டு ரூபாய் 3,120. 12 ஜூன் 2014 அன்று 23,851. அதாவது 7.65 மடங்கு உயர்ந்துள்ளது. பலர் 3000 ரூபாய் பங்கை விலை கொடுத்து வாங்கத் தயங்குவார்கள், ஆனால் இன்று 23,000 ரூபாய் கொடுத்து வாங்குபவர்கள் மிகக் குறைவு.

கடந்த 5 வருடங்களில் சந்தை சிறப்பாகச் செயல்படவில்லை, அப்படி இருந்தும் இத்தனை விலை உயர்ந்த பங்கு எப்படி 7 மடங்கிற்குப் போகும்? ஒரு நிறுவனம் அவர்களுடைய பிரிவில் முதன்மையாக, மேலும் சிறப்பாகவும் செயல்பட்டால் எத்தனை விலை வேண்டுமானாலும் கொடுத்து வாங்குபவர்கள் உண்டு.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் மியூச்சுவல் ஃபண்ட் திட்டமான ரிலையன்ஸ் குரோத் பண்ட் தற்போது NAV 652 ரூபாய். இது 1995ல் 10 ரூபாய்க்கு ஆரம்பிக்கப்பட்டது, 18.5 வருடத்தில் 65 மடங்கு. இது ஒன்றும் நாம் நினைப்பதை போல காஸ்ட்லி இல்லை. நாம் எவ்வளவு சதவிகிதம் உயர்ந்துள்ளது என்று பார்க்க வேண்டுமே தவிர அது எவ்வளவு ரூபாய் என்று பார்க்கத் தேவையில்லை.

இத்தனை வருடங்களாகக் கிடப்பில் போடப்பட்ட பல அரசாங்க முடிவுகள் முடிவுக்கு வரும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை. இவையாவும் அடுத்த ரவுண்டு சந்தை செல்வதற்கு உந்துதலான விஷயங்கள். மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 30 பங்குகளின் சராசரி. இதில் நன்றாக செயல்படாத நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டு நன்றாக செயல்படக்கூடிய நிறுவனங்கள் பங்கு பெறும்.

இதில் பங்கு பெற்றுள்ள பெரும்பாலான நிறுவனங்கள் நன்றாகச் செயல்படுவதால் அந்த நிறுவனத்தின் மதிப்பும் உயர்ந்த வண்ணம் உள்ளது. அவ்வாறு உயரும்போது பங்குச் சந்தை தானாக உயர்ந்து விடும்.

எல்லோருக்கும் பொதுவாக தெரிந்த குறியீடுகள் சென்செக்ஸ் மற்றும் நிப்டிதான் அதைத் தவிர மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் என்று சொல்லக் கூடிய அடுத்த கட்டத்தில் உள்ள நிறுவனங்கள் பல மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றன. இந்தக் குறியீடுகள் 2008-ல் இருந்ததைவிட இன்னும் குறைவாகவே உள்ளன.

இவை வரும் காலங்களில் சென்செக்ஸை விட மிகச் சிறப்பாகச் செயல்பட வாய்ப்புள்ளன. முன்பு சொன்னது போல மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் 11 முதல் 16 மடங்கு வரை (2003-2008) 5 வருடத்தில் உயர்ந்து காணப்பட்டுள்ளது. இதை வாய்ப்பு எனக் கருதி முதலீடு செய்தால் நமக்கு, அதே அளவோ, கொஞ்சம் கம்மியாகவோ, கூடவோ கிடைக்க நிறைய சாத்தியக்கூறுகள் உள்ளன. அதைத் தவிர்த்து அது மாதிரி இனி நடக்காது என்று நீண்ட கால முதலீடுகளைக் கூட பாதுகாப்பு கருதி வங்கி வைப்பு நிதியில் வைத்திருந்தால் நஷ்டம் யாருக்கு? யோசிக்க வேண்டிய தருணமிது.

இது நடக்காது என்று உங்களுக்கு ஒரு வேளை தோன்றினால் ஒன்றை மட்டும் யோசித்துப் பார்க்க வேண்டும். நம்முடைய வசதிகளும், வாய்ப்புகளும் மற்றும் நம்முடைய அன்றாட தேவைகளும் நாளுக்கு நாள் அதிகரிக்குமா, இல்லையா? அதிகரிக்கும் என்று நினைத்தால் முதலீடு செய்வதற்கு இது மிகச் சிறந்த தருணம். குறையும் என்று தோன்றினால் பணத்தை வங்கியிலே பூட்டி வைத்துக் கொள்ளலாம். முடிவு உங்கள் கையில்.

சாராம்சம்: வாய்ப்புகளை நாம்தான் உணர வேண்டும். வரும் 5 ஆண்டுகளில் நம்முடைய முதலீடுகள் பங்குச் சந்தையிலோ அல்லது மியூச்சுவல் ஃபண்டிலோ இருந்தால் நாம் கண்டிப்பாக நிறைய பணம் பண்ணும் வாய்ப்புகள் அதிகம். கடந்த காலங்களில் எவ்வாறு செயல்பட்டுள்ளது என்று சற்று உள்நோக்கி பார்த்தால் நமக்கு எவ்வளவு பெரிய வாய்ப்பு மூடி கிடைக்கிறது என்பதை உணர முடியும்.

பங்கு சந்தை முதலீட்டை 10 முதல் 12 ஆண்டுகளாக (ஒவ்வொரு கட்டமாக) எடுத்துகொண்டால், குறைந்தது 3 மடங்கு முதல் 10 மடங்கு வரை பெருகி உள்ளது. கடந்த 6வருடமாக ஒன்றும் ரிடர்ன்ஸ் கிடைக்காததால் வரும் 4 முதல் 6 வருடங்களில் நல்ல ரிடர்ன்ஸ் கிடைக்க வாய்ப்புள்ளது.

அதைத் தவிர்த்து பங்கு சந்தை என்பது ஒரு சூதாட்டம், அதில் எல்லா பணத்தையும் இழக்கவேண்டியதுதான் என்று குற்றம் சொல்லிக்கொண்டே இந்த வாய்ப்பையும் தவற விடலாம். முன்பு செய்த தவற்றினை திருத்திக் கொண்டு நீண்ட கால அடிப்படையில்முதலீடு செய்தால் வெற்றி நிச்சயம் நமக்குத்தான். இது உண்மையிலேயே நமக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய முதலீட்டு வாய்ப்பு, புரிந்து கொள்வோம்.

பணம் செய்வோம் வாருங்கள்! 

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்

"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"

சும்மாவா சொன்னாக பெரியவங்க !!!

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.

இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் "எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!

அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.


கடலில் மிதக்கும் காற்றாலை





வளரும் நாடுகளில் அதிகரித்து வரும் மின் சக்தியின் தேவையை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் பாரம்பரிய முறைகளில் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வரும் அனல் மின்சாரம், நீர் மின்சாரம் ஆகியவற்றை விட காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், செலவு குறைந்ததாகவும், அணு மின்சாரத்தைப் போல அல்லாமல் கொஞ்சமும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வழிமுறையாகவும் இருந்து வருகிறது.


இதனால் நிலப்பகுதிகள் குறைந்த நாடுகளில் கூட காற்றாலைகளை புதிய உத்திகளுடன் பயன்படுத்தும் முறை பிரபலமாகி வருகிறது. அவற்றில் ஒன்றுதான் கடலில் மிதந்து கொண்டே அங்கு வீசும் காற்றின் இயக்க சக்தியை மின்சக்தியாக மாற்றவல்ல காற்றாலை மின்சாரத் தொழில்நுட்பம். உலக சமாதனதுக்காக உழைக்கும் நோர்வே நாட்டிலும், போச்சுக்கல் உள்ளிட்ட இன்னும் சில நாடுகளிலும் காற்றாலை மின்சாரம் பிரபலமடைந்து வருகிறது.


ஹைவிண்ட் (Hywind) என அழைக்கப்படும் 2.3 மெகா வாட் மின்னாற்றலை உற்பத்தி செய்யும் திறனுடன் கூடிய மிதக்கும் காற்றாலைகளை இந்த நாடுகளுக்கு 'சிம்மென்ஸ்'(siemens) நிறுவனம் தயாரித்து வழங்கி வருகிறது. தற்போது நோர்வே நாட்டின் கடற்கரையோரங்களில் சோதனை முறையில் இயக்கப்பட்டு எதிர்பார்க்கப்பட்ட அளவில் மின் உற்பத்தி பெறப்பட்டுள்ளதால், இந்த மிதக்கும் காற்றாலைகளை வட அமெரிக்கக் கரையோரங்கள் மற்றும் இங்கிலாந்து  உள்ளிட்ட நாடுகளின் கடற்கரையோரங்களிலும் அமைப்பதற்கு பல பன்னாட்டு மரபுசாரா மின் உற்பத்தி நிறுவனங்கள் அனுமதி பெற்றுவிட்டன.

பொன்மொழிகள்

"பணக்காரனாக ஆவதற்கு பணத்தைச் சேர்த்து வைக்க வேண்டியதில்லை.
தேவைகளைக் குறைத்துக் கொண்டாலே போதும். " -ஸ்பெயின்.


"போலியான நண்பனாக இருப்பதைவிட, வெளிப்படையான எதிரியாக இருப்பது மேல்." -இங்கிலாந்து.

"தாகத்தால் தவிக்கும் ஒருவனுக்கு ஒரு சொட்டுத் தண்ணீருக்கு முன்னால் ஓராயிரம் முத்துக்கள் மதிப்புள்ளது ஆகாது." -பாரசீகம்.

"செழிப்பானபண்ணையிலிருந்துகுதிரையைவாங்கு:ஏழை வீட்டிலிருந்து பெண்ணை எடு." -எஸ்டோனியா.

"மனிதர்கள் நேசமாயுள்ள இடத்தில் தண்ணீர் கூட இனிப்பாய் இருக்கும்." - சீனா.

"நாய் குரைக்கிற போதெல்லாம் நீங்கள் தாமதித்தீர்களேயானால், நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லவே முடியாது." - அராபி.



"ஒருவன் ஆயிரம் மைல்கள் நடந்தாலும், ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்துத்தான் அத்தனை மைல்கள் நடக்க முடிந்ததென்பதை மறவாதீர்கள்." - சீனா.

"பக்தியோடு பிரார்த்தனை செய். ஆனால் சுத்தியலை பலமாய் அடி." -இங்கிலாந்து.

"உன் அண்டை வீட்டுக்காரனை நேசி. ஆனால் உன் வீட்டு வேலியை எடுத்து விடாதே." -ஜெர்மன்.

"ஆசை பேராசையாகவும், அன்பு வெறியாகவும் மாறும் போது அமைதி விலகி எங்கோ போய்விடுகிறது."-ஜப்பான்

திருடி

சிறுவன் ஒருவன் ஒரு கூடையில் நாவல் பழங்களை வைத்து தெருவில் விற்றுக் கொண்டு வந்தான்.ஒரு பெண் அவனை அழைக்கவும் அவள் வீட்டிற்கு வந்து கூடையை இறக்கினான்.அந்தப்பெண் ,''நான் வீட்டிற்குள் எடுத்துச் சென்று நல்ல பழங்களைப் பொறுக்கி எடுத்துக் கொள்ளவா?''என்று கேட்டாள்.சிறுவனும் சம்மதிக்கவே அவள் கூடையை வீட்டினுள் எடுத்துசென்று நல்ல பழங்களாகப் பார்த்து பொறுக்கி எடுத்தாள் .

 பையன் வீட்டிற்குள் செல்லவில்லை.வெளியே இருந்தமரத்தில் அமர்ந்திருந்த பறவைகளைப் பார்த்து மகிழ்ச்சியுடன் விசில் அடித்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து அந்தப் பெண் வெளியே வந்து கூடையை அவனிடம் கொடுத்து விட்டுத் தான் எடுத்த பழங்களுக்கு விலை கேட்டாள்.

அவனும் எடை போட்டு விலை சொன்னான்.பணத்தைக் கொடுத்த அந்தப் பெண் கேட்டாள்,''ஏன் தம்பி,நான் உள்ளே கூடையை எடுத்து சென்ற போது நீ உள்ளே வரவில்லை.நான் அதிகமாகப் பழங்களை எடுத்திருந்தால் என்ன .செய்வாய்?உனக்கு நஷ்டம் ஆகாதா?நான் உன்னை ஏமாற்ற மாட்டேன் என்று உனக்கு எப்படித் தெரியும்?''சிறுவன் சொன்னான்,''அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை.நீங்கள் அவ்வாறு அதிகம் எடுத்திருந்தால் எனக்கு நஷ்டம் சில பழங்களே.ஆனால் உங்களுக்கு திருடி என்ற பட்டம் கிடைக்குமே, அந்த நஷ்டத்தை ஏற்க நீங்கள் தயாரா?''அந்தப் பெண் வாயடைத்து நின்றாள்