இந்தியாவிடம் இருந்து ரயில் இன்ஜின்களை வாடகைக்கு வாங்க பாகிஸ்தான் விருப்பம்

Indian Train
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ரயில் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை போக்க, இந்தியாவிடம் ரயில் இன்ஜின்களை வாடகைக்கு வாங்க பாகிஸ்தான் தீர்மானித்துள்ளது.

பாகிஸ்தானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியால், நாட்டின் முக்கிய திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் அந்நாட்டு நிர்வாகம் திணறி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் இயங்கி வந்த ரயில் இன்ஜின்கள் தகுந்த பராமரிப்பு மற்றும் பழுதடைந்த நிலையில் உள்ளது.

இவற்றை சரிசெய்ய தேவையான மாற்று உதிரிபாகங்களை வாங்க கூட நிதி ஆதாரம் இல்லை. இதனால் 100க்கும் மேற்பட்ட ரயில் இன்ஜின்கள் பயன்பாடு இல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பல ரயில் இன்ஜின்கள் மிகவும் மோசமான நிலையில் ஓடி வருகிறது.

இது குறித்து பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் குலாம் அகமது பிலோயர் தலைமையிலான கூட்டம் பெஷவரில் நடந்தது. இதில் நாட்டு மக்களின் போக்குவரத்தை கருத்தில் கொண்டு இந்திய அரசிடம் இருந்து 200 முதல் 300 ரயில் இன்ஜின்கள் வாடகைக்கு வாங்கி இயக்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டது.

இதற்காக 2 நாட்டு ரயில்வே அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். பாகிஸ்தானின் திட்டத்திற்கு இந்திய தரப்பில் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், முதல்கட்டமாக 50 ரயில் இன்ஜின்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்படும் என தெரிகிறது.