திருடி

சிறுவன் ஒருவன் ஒரு கூடையில் நாவல் பழங்களை வைத்து தெருவில் விற்றுக் கொண்டு வந்தான்.ஒரு பெண் அவனை அழைக்கவும் அவள் வீட்டிற்கு வந்து கூடையை இறக்கினான்.அந்தப்பெண் ,''நான் வீட்டிற்குள் எடுத்துச் சென்று நல்ல பழங்களைப் பொறுக்கி எடுத்துக் கொள்ளவா?''என்று கேட்டாள்.சிறுவனும் சம்மதிக்கவே அவள் கூடையை வீட்டினுள் எடுத்துசென்று நல்ல பழங்களாகப் பார்த்து பொறுக்கி எடுத்தாள் .

 பையன் வீட்டிற்குள் செல்லவில்லை.வெளியே இருந்தமரத்தில் அமர்ந்திருந்த பறவைகளைப் பார்த்து மகிழ்ச்சியுடன் விசில் அடித்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து அந்தப் பெண் வெளியே வந்து கூடையை அவனிடம் கொடுத்து விட்டுத் தான் எடுத்த பழங்களுக்கு விலை கேட்டாள்.

அவனும் எடை போட்டு விலை சொன்னான்.பணத்தைக் கொடுத்த அந்தப் பெண் கேட்டாள்,''ஏன் தம்பி,நான் உள்ளே கூடையை எடுத்து சென்ற போது நீ உள்ளே வரவில்லை.நான் அதிகமாகப் பழங்களை எடுத்திருந்தால் என்ன .செய்வாய்?உனக்கு நஷ்டம் ஆகாதா?நான் உன்னை ஏமாற்ற மாட்டேன் என்று உனக்கு எப்படித் தெரியும்?''சிறுவன் சொன்னான்,''அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை.நீங்கள் அவ்வாறு அதிகம் எடுத்திருந்தால் எனக்கு நஷ்டம் சில பழங்களே.ஆனால் உங்களுக்கு திருடி என்ற பட்டம் கிடைக்குமே, அந்த நஷ்டத்தை ஏற்க நீங்கள் தயாரா?''அந்தப் பெண் வாயடைத்து நின்றாள்