இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு


அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. திங்கட்கிழமையன்று வணிகத்தில் 52 ரூபாய் 84 காசு என்ற அளவைத் தொட்ட இது செவ்வாய்கிழமை 53 ரூபாய் 74 காசு அளவுக்கு குறைந்தது. இது மிகப்பெரிய சரிவு என்று சந்தையியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இறக்குமதியாளர்கள் கவலையும் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர். திங்கட்கிழமையன்று இந்தியாவின் தொழிற்சாலை உற்பத்திக் குறியீடு குறைந்துள்ளதாக வெளியான செய்தியால், அமெரிக்க டாலரை வாங்குவதில் வங்கி மற்றும் இறக்குமதியாளர்களிடம் கடும் போட்டி நிலவுகிறது.

11 பைசா உயர்வு

இன்னொருபுறம் பிற நாட்டு நாணயங்களுக்கும், அமெரிக்க டாலருக்கும் இடையேயான விகிதாச்சார மாற்றத்தின் தாக்கமும், யூரோவின் நிச்சயமற்றத் தன்மையும் இந்திய ரூபாயின் மீது ஆதிக்கம் செலுத்துவதாக கூறப்படுகிறது. வரும் 16ம் தேதியன்று ரிசர்வ் வங்கி, ரூபாய் நோட்டு குறித்த அரையாண்டு கொள்கையை வெளியிட உள்ள நிலையில் ரூபாயின் சரிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், இன்று காலையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 பைசா அதிகரித்தது. இது சாதாரண உயர்வுதான் என்கின்றனர் சந்தையியல் வல்லுநர்கள்

இறக்குமதிக்கு திண்டாட்டம்

ரூபாய் மதிப்பு சரிவினால் கச்சா எண்ணெய் சார்ந்த எரிபொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்ட பொருட்களின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்றுமதியாளர்கள் கொண்டாட்டம்

டாலரின் மதிப்பு உயர்வு திருப்பூரில் உள்ள பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் காட்டில் அடைமழையாகக் கொட்டிவருகிறது. இதுவரை சரிவில் இருந்த பின்னலாடை சந்தை இதனால் மீண்டும் வளர்ச்சிப்பாதைக்குத் திரும்பும் என்று பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்