ரூ.1.90 கோடியை திருப்பி கொடுத்த ஆட்டோ டிரைவர்

 குஜராத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் தனக்கு சொந்தமில்லாத நிலத்திற்கு அளிக்கப்பட்ட ரூ. 1.90 கோடியை திருப்பி அனுப்பி அனைவரையும் அசர வைத்துள்ளார். குஜராத் மாநிலம், சனந்த் பகுதியை சேர்ந்தவர் ராஜூ பர்வாத். ஆட்டோ டிரைவராக உள்ளார்.  சனந்த் பகுதியில் ராஜூவின் குடும்பத்தினருக்கு 10 பிகா(4 பிகா) 1 ஏக்கர் நிலம் இருந்துள்ளது. ராஜூவின் தாத்தா 10 பிகாவில் 3 பிகா நிலத்தை பலருக்கு விற்பனை செய்து விட்டார். அந்த இடத்தில் தற்போது 40 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

 இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சனந்த் பகுதியில் நானோ தொழிற்சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதில், ராஜுவின் தாத்தா விற்பனை செய்த நிலமும் அடங்கும். விற்பனை செய்யப்பட்ட நிலத்தை வாங்கியவர்கள் தங்களது பெயரில் மாற்றததால் இப்போதும் ராஜூவின் குடும்பத்தினர் பெயரிலேயே இருந்துள்ளது. எனவே, கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்குண்டான இழப்பீடு தொகையாக ரூ. 1.9 கோடி தொகை ராஜூவின் பெயரில் காசோலையாக வந்துள்ளது. ஆனால், தனக்கு சொந்தமில்லாத நிலத்திற்காக வந்த பணத்தை வாங்கி தனது வங்கி கணக்கில் போட்டுக் கொள்ளாமல், அது என்னுடைய பணம் இல்லை என்று கூறி டாடா நிறுவனத்துக்கே திருப்பி அனுப்பியுள்ளார் ராஜூ. ராஜூவின் செயல் டாடா அதிகாரிகளையும், குஜராஜ் தொழில் வளர்ச்சி கழக அதிகாரிகளையும் பெரும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது