வங்கிகளின் நிகர வசூலாகாத கடன்ரூ.2 லட்சம் கோடியை தாண்டும்


 மார்ச் மாதத்துடன் நிறைவடைய உள்ள நடப்பு முழு நிதியாண்டில், இந்திய வங்கிகளின் நிகர வசூலாகாத கடன், 2 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும் என, அசோசெம் அமைப்பு தெரிவித்துள்ளது.கடன் ஒதுக்கீடு அதிகரிப்பு, சொத்து மதிப்பில் ஏற்படும் மாறுதல், மூலதனம் திரட்டுவதில் உள்ள சவால்கள் போன்றவற்றால், வங்கித் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றோடு, நடப்பு பற்றாக்குறை மற்றும் வர்த்தகப் பற்றாக்குறையின் தாக்கத்தையும் சமாளிக்க வேண்டிய நிர்பந்தம், வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ளது.இது போன்ற காரணங்களால், வங்கிகளின் வசூலாகாத கடன் அதிகரித்து, அவற்றின் நிகர லாபமும் குறைந்துள்ளது.

மின்சாரம், விமானச் சேவை, நெடுஞ்சாலை, நுண் கடன் நிறுவனங்கள், தொலைத்தொடர்புத் துறை, துறைமுகங்கள் உள்ளிட்ட துறைகளில் இருந்து, வங்கிகளுக்கு கடன் தொகை முழுமையாக திரும்ப வராத நிலை உள்ளது.இதன் விளைவாக, சென்ற ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலத்தில், வங்கிகளின் வசூலாகாத கடன், 2.94 சதவீதம் அதாவது, 1.57 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தது. இது, வரும் மார்ச் மாதத்துடன் நிறைவடைய உள்ள முழு நிதியாண்டில், 3.75 சதவீதம் அதாவது, 2 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.