ஓய்வு பெறுகிறார் ரத்தன் டாடா;வருகிறார் சைரஸ் மிஸ்ட்ரி

பாரம்பரிய வர்த்தக நிறுவனமாகத் திகழ்ந்த டாடா குழும நிறுவனத்தை நூறு பில்லியன் டாலர் அளவுக்கான உலகளாவிய வர்த்தக சாம்ராஜ்யமாக மாற்றிய பெருமை கொண்டவர் ரத்தன் டாடா. நாட்டிலும் உலக அளவிலும் புகழ் மிக்க நிறுவனமாகத் திகழும் டாடா குழுமத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து நாளை வெள்ளிக் கிழமையுடன் ஓய்வு பெறுகிறார் ரத்தன் டாடா. இந்தியாவின் மிகப் பழைமையான வர்த்தக சாம்ராஜ்யத்தில் அவருடைய 50 வருட தலைமை ஓட்டம் நாளையுடன் நிறைவை எட்டுகிறது.

தற்போது 75 வயதை எட்டும் ரத்தன் டாடா, தன்னுடைய பொறுப்புகளை 44 வயதான சைரஸ் மிஸ்ட்ரியிடம் ஒப்படைக்கிறார். சைரஸ் மிஸ்ட்ரி சென்ற வருடம் தலைமைப் பொறுப்புக்கு முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


ரத்தன் டாடா 21 வருடங்கள் குழும தலைவராக இருந்துள்ளார். 1991ம் ஆண்டு    ஜேஆர்டி டாடாவுக்குப் பிறகு தலைமைப் பொறுப்பை ஏற்று திறம்பட நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். தற்போது பொறுப்பேற்கும் மிஸ்ட்ரி, ஷபூர்ஜி பலோன்ஜி குழுமத்தின் குடும்ப உறுப்பினர். இவர்கள் டாடா சன்ஸ் நிறுவனத்தில் 18% பங்குகளைக் கொண்டிருப்பவர்கள். இவர் ஐந்து நபர் தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்பட்டிருப்பவர்.


ரத்தன் டாடாவின் காலத்தில் டாடா குழுமம் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. நூறு பில்லியன் டாலர் அளவுக்கு (475,721 கோடி ரூபாய்) அளவுக்கு 2011-2012 கால கட்டத்தில் வளர்ச்சி கண்டுள்ளது. 1991ல் இந்த நிறுவனத்தின் வருவாய் மதிப்பு ரூ.10 ஆயிரம் கோடியாக இருந்தது.

இங்கிலாந்திலுள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டமைப்பு பொறியியலில் பட்டப் படிப்பை முடித்தார் ரத்தன் டாடா. பின்னர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முதுநிலை மேலாண்மையில் பட்டம் பெற்றார்.

டாடா குழுமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இவற்றை எல்லாம் உள்ளடக்கிய டாடா குழுமத்தின் பல்வேறு பொறுப்புகளை திறம்பட நிர்வகித்துள்ளார் ரத்தன் டாடா. இவர் கடந்த 1991ம் ஆண்டு டாடா குழுமத்தின் தலைவராகப் பொறுப்பேற்று நிறுவனத்தை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்தினார். பல்வேறு சமூக சேவைகளுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ரத்தன் டாடாவுக்கு பத்மபூஷண், பத்மவிபூஷண் உள்ளிட்ட நாட்டின் உயரிய விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன.