அன்னிய நிதி நிறுவனங்களின் நிகர பங்கு முதலீடு



நடப்பு டிசம்பர் மாதம், 3 முதல், 7ம் தேதி வரையிலுமாக அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில், நிகர அளவில், 6,147 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான,'செபி' தெரிவித்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் வகையில், மத்திய அரசு, பல்வேறு ஊக்குவிப்புத் திட்டங்களை அறிவித்தது. இதனால், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது.

கணக்கீட்டு காலத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில், 20,314 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன. விற்பனை:அதேசமயம், 14,167 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளன. இதையடுத்து, இந்நிறுவனங்களின் நிகர முதலீடு, 6,147 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது.

அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது போலவே, கடன் பத்திரங்களிலும் அதிகளவில் முதலீடு மேற்கொண்டு வருகின்றன. நடப்பாண்டில், இதுவரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள், கடன் பத்திரங்களில், 31,155 கோடி ரூபாயை முதலீடு செய்துஉள்ளன.


துணை கணக்கு:நடப்பாண்டில், இதுவரையிலுமாக, இந்நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில், நிகர அளவில், 1.14 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன.சென்ற 7ம் தேதி வரையிலுமாக, 1,749 அன்னிய நிதி நிறுவனங்கள்,'செபி' அமைப்பிடம் பதிவு செய்து கொண்டுள்ளன. இந்நிறுவனங்களின் துணை கணக்குகளின் எண்ணிக்கை, 6,306 ஆக உள்ளன.