பணம் செய்ய விரும்பு

அறம் செய்ய விரும்பு என்பதுதான் சரி. ஆனால் நல்லது செய்யவும் பணம் தேவையே? நமது சமூகத்தில் பொதுவாக ஏழைகளிடமும் நடுத்தர மக்களிடமும் பணக்காரர்கள் என்றால் ஏதோ கெட்டவர்கள் போலவும், பணம் இருந்தால் மன நிம்மதி போய்விடும் என்றும் சில எண்ணங்கள் உள்ளது. நல்ல வழியில் சம்பாதித்து நல்ல விஷயங்களுக்காக செலவிடப்படும் பணம் ஒரு தனிப்பட்ட மனிதனுக்கும், அவனின் குடும்பத்துக்கும், அவன் சார்ந்த சமூகத்துக்கும் நல்லதே ஆகும்.
நாம் ஏன் பணம் சம்பாதிக்க வேண்டும்? வேறு எவரிடமும் கை ஏந்தாமல் நமது சொந்த தேவைகளையும் குடும்பத்தின் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளவும், சமூகத்துக்காக செலவிடவும் பணம் தேவை. இவ்வாறு ஒவ்வொருவரும் நல்ல முறையில் பணம் சம்பாதித்து சேமித்து வந்தால் அது அந்த நாட்டையே வளமாக்க உதவும்.

எவ்வளவு பணம் சம்பாதிக்க வேண்டும்? சரி... இப்பொழுது நாம் ஒரு வேலைக்கு செல்கிறோம் அல்லது நாமே சொந்தமாக தொழில் செய்கிறோம். பணம் நமக்கு சம்பளமாகவோ அல்லது வருமானமாகவோ மாதந்தோறும் வருகிறது. அவரவர் வேலைகளுக்கு தகுந்தவாறு மாதம் ரூ. 50,000 மோ, ரூ. 100,000 மோ, ரூ. 200,000 மோ சம்பாதிக்கலாம். யார் பணக்காரர்?.... ரூ. 100,000 வருமானம் பெறுபவரா?.... மாதம் ரூ. 200,000 வருமானம் பெறுபவர் ரூ. 250,000 செலவு செய்தால், அதேப்போல் ரூ. 50,000 வருமானம் பெறுபவர் ரூ. 25,000 மட்டுமே செலவு செய்தால், இப்பொழுது யார் பணக்காரர்?.

ரூ. 50,000 வருமானம் பெறுபவர், தான் செலவு செய்யும் பணம் போக மீதியை என்ன செய்கிறார் என்பதும் முக்கியம். ஒருவர் பணக்காரர் ஆவதை, அவர் சேமிப்பு என்று எதை நினைக்கிறார் என்பதையும், அவர் எவ்வாறு சேமிக்கிறார் என்பதையும் பொறுத்தே அமையும். ரூ. 50,000 வருமானம் பெறுபவர் சிறப்பாக திட்டமிட்டு சிறந்த முறையில் சேமித்தால், முதலீடு செய்தால், அவரே மாற்ற இருவரை விட குறுகிய காலத்தில் பணக்காரர் ஆகலாம்.

ஆகவே ஒருவர் பணக்காரர் ஆவதை தீர்மானிப்பது ஒருவரது வருமானம் மட்டும் அல்ல, அவரின் செலவிடும் பழக்கமும், அவரின் சேமிக்கும் பழக்கமுமே ஆகும்.