தங்கம்

அமெரிக்காவின் கடன் கொள்கை காரணமாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது

முந்தைய பதிவை காண இங்கே செல்லவும்



அமெரிக்காவின் கடம் கொள்கை பற்றி வேல்தர்மா கட்டுரை

கடன் பட்டுக் கலங்கும் அமெரிக்கா.

நாம் வரவிற்கு மிஞ்சி செலவு செய்தால் கடன் படுவோம். பட்ட கடனை அடைக்க செலவை குறைத்து வரவைக் கூட்ட வேண்டும் அல்லது கடன் பட்டு பட்ட கடனை அடைக்க வேண்டும் அல்லது இரண்டையும் செய்ய வேண்டும். பட்ட கடனை அடைக்காவிடில் மேற் கொண்டு கடன் பெறுவது எமக்கு மிகவும் சிரமமாக அமையும். எமக்கு கடன் தருபவர்கள் அதிக வட்டி அறவிடுவார்கள். இப்படியான ஒரு பிரச்சனையில் அமெரிக்கா இப்போது அகப்பட்டுள்ளது. அமெரிக்க அரசு தொடர்ந்து வரவிற்கு மிஞ்சி செலவு செய்து வந்தது. 1950இல் இருந்து 1980 வரை கட்டுப்பாட்டுக்குள் இருந்த அமெரிக்க அரசின் கடன் சுமை 1980இற்குப் பின்னர் மோசமாக வளர்ந்து கொண்டே போகின்றது. தற்போது அமெரிக்காவின் வரவு 2.2ரில்லியன் டொலர்கள் செலவு 3.5ரில்லியன் டொலர்கள். பாவம் அமெரிக்கா அதற்குக் கடன் கொடுப்பவர்களில் முக்கியமானவர் சீன அரசு. அமெரிக்கா நாளொன்றிற்கு 4பில்லியன் டொலர்களை அதாவது வருடத்திற்கு ஒன்றரை ரில்லியன் டொலர்கள் வட்டியாகச் செலுத்தவேண்டிய நிலையில் உள்ளது .

அமெரிக்காவின் கடன் உச்ச வரம்பு(Debt Ceiling)
அமெரிக்க அரசு எவ்வளவு கடன் படலாம் என்பதற்கு என்று ஒரு உச்ச வரம்பு (debt ceiling) உள்ளது. இதை அமெரிக்க பாராளமன்றத்தின் (காங்கிரசு) இரு அவைகளான மக்களவையும் மூதவையும் முடிவு செய்கின்றன. அமெரிக்காவின் இப்போதைய கடன் உச்ச வரம்பு 14.3ரில்லியன் டொலர்கள் ($14,300,000,000,000). அமெரிக்காவின் கடன் சுமை அதிகரிப்பதால் இந்த உச்ச வரம்பை உயர்த்த வேண்டும். அதுவும் ஆகஸ்ட் 2-ம் திகதிக்கு முன்னர் இது அமெரிக்க பாராளமன்ற அவைகளால் ஒரு சட்டமாக அங்கீகரிக்கப் படவேண்டும். இந்த உச்சவரம்பை உயர்த்தி மேலும் கடன் பட்டு கடன் அடைக்க வேண்டும். அல்லாவிடில் அமெரிக்கா தனது கடனுக்கான வட்டிகளைச் செலுத்த முடியாத நிலை ஏற்படும். அமெரிக்கக் கடன் வளரத் தொடங்கியபின் - 1980 இற்குப் பின்- 39தடவை உயர்த்தப் பட்டுள்ளன. ரொனால்ட் ரீகன் நிர்வாகத்தில் மட்டும் 17தடவை உயர்த்தப்பட்டன.


பராக் ஒபாமாவின் இக்கட்டான நிலை.
அமெரிக்க அதிபருக்கு நிர்வாக அதிகாரம் மட்டுமே உண்டு. சட்டவாக்க அதிகாரம் மக்களவையிடமும் மூதவையிடமுமே உண்டு. முதலில் மக்களவையில் சட்ட மூலம் நிறவேற்றப்பட்டு பின்னர் மூதவையில் அங்கீகரிக்கப்பட்டு ஒரு சட்டம் அமூலுக்கு வரும்.தற்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபமா சனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர். மக்களவையில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருப்பதால்பராக் ஒபாமா இக்கட்டான நிலையில் இருக்கிறார். மூதவையில் பராக் ஒபாமாவின் சனநாயகக் கட்சியினர் பெரும்பான்மையினராக இருக்கிறார்கள். 2010இல் நடந்த மக்களவைத் தேர்தலில் குடியரசுக் கட்சியினர் அரச செலவீனங்களைக் குறைப்போம் என்ற வாக்குறுதியுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிறது. இரு கட்சியினரினதும் வெற்றி வாய்ப்புக்கள் இந்த கடன் நெருக்கடியை எப்படிக் கையாள்கிறார்கள் என்பதில் தங்கி இருக்கிறது.

எந்த வழி
கடன் சுமை அதிகரித்த அமெரிக்கா செய்ய வேண்டியவை:
1. செலவுகளைக் குறைத்தல். இது வறிய மக்களின் வாழ்வாதரத்தைப் பதிக்கும். அரச நலன்புரி சேவைகளுக்கான செலவுகள் குறைக்க வறிய மக்கள் பாதிக்கப்படுவர். மாணவர்கள் பாதிக்கப்படுவர். சுகாதார சேவைகள் பாதிக்கப்படும். பாதுகாப்புச் செல்வீனங்கள் குறையும்.
2. வரிகளை அதிகரித்தல். இது அமெரிக்கப் பணக்காரர்களையும் வர்த்தக நிறுவனங்களிலும் பாதிக்கும். பொருளாதார வளர்ச்சி குன்றும்
3. மேலும் கடன் படல். அமெரிக்கா மேலும் கடன் பட கடன் உச்ச வரம்பை உயர்த்த வேண்டும்.
ஒபாமா இந்த மூன்றையும் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறார். ஆனால் எதை எந்த அளவில் செய்வது என்பதில் அமெரிக்காவின் இரு கட்சியினரிடையே முரண்பாடு.
அமெரிக்க மக்களவைத் தலைவர் ஜோன் போர்னர் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன் 22-07-2011இலன்று கடன் நெருக்கடி பற்றி கலந்துரையாடினார். ஒபாமா செல்வந்தர்கள் மீதான வரியை அதிகரிக்கும் யோசனையை முன் வைத்தபடியால் மக்களவைத் தலைவர் ஜோன் போர்னர் பேச்சு வார்த்தையை முறித்துக் கொண்டு வெளியேறிவிட்டார். வலது சாரியான அவர் வரி அதிகரிப்பை விரும்பவில்லை. ஒபாமா பல சமூக சேவை சுகாதார சேவைச் செலவீனங்களைக் குறைக்க ஒத்துக் கொண்டும் மக்களவைத் தலைவர் ஜோன் போர்னர் பேச்சை முறித்ததைப் பலர் விரும்பவில்லை.

அமெரிக்கக் கடன் நெருக்கடியின் பின்னணி.
2010இல் ஒபாமாவும் மக்களவையும் அரச செலவீனங்களை மூன்று ரில்லியன் டொலர்களால் குறைக்கவும் வரி வருமானத்தை ஒரு ரில்லியன் டொலர்களால் அதிகரிக்கவும் ஒத்துக் கொண்டனர். 2011 ஜனவரியில் அறுவர் குழு எனப்படும் இரு கட்சிகளையும் சேர்ந்த ஆறு மூதவை உறுப்பினர்களைக் கொண்ட குழு அமெரிக்காவின் நீண்டகாலக் கடன் சுமையைக் குறைக்க உடன்பட்டது. இக்குழுவிற்கு அமெரிக்க உப அதிபர் பிடென் தலைமை தாங்கியதால் பிடென் குழுஎன்றும் அழைப்பர்.. 2011இல் குடியரசு உறுப்பினர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மக்களவை முந்தைய ஆண்டிலும் பார்க்க 61பில்லியன் டொலர்கள் குறைவான செலவீனங்களைக் கொண்ட பாதிட்டை நிறைவேற்ற அதை ஒரு மாதம் கழித்து சனநாயக கட்சி உறுப்பினர்களை பெரும்பான்மையாகக் கொண்ட மூதவை நிராகரித்தது. 2011 ஏப்ரலில் அமெரிக்க அரசின் பாதீடு நிறை வேற்றப்படாமல் அரச நிர்வாகம் இழுத்து மூடப்படுமா என்ற நெருக்கடியின் விளிம்பு வரை அமெரிக்கா இட்டுச் செல்லப்பட்டது. இறுதியில் பத்து வருடங்களில் ஆறு ரில்லியன் டொலர்கள் செலவீனக் குறைப்புடன் அரச பாதீட்டை மக்களவை நிறைவேற்றியது. 2011 மே மாதம் 9-ம் திகதி அமெரிக்க மக்களவைத் தலைவர் ஜோன் போர்னர் கடன் உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டால் அதே அளவு செலவீனக் குறைப்புச் செய்யப்பட வேண்டும் என்று சூளுரைத்தார். 11-05-2011 மக்களவை கல்வி, தொழில், சுகாதார சேவை போன்றவற்றிற்கான செலவீனக் கட்டுப்பாகளை முன்வைத்தது. 16-05-2011 அமெரிக்க அரசு தன் கடன் உச்சவரம்பான 14.3 ரில்லியன் டொலர்களை எட்டியது. 17-05-2011 அறுவர் குழுவிற்குள்(பிடென் குழு) முரண்பாடுகள் தோன்றின. 31-05-2011 இலன்று அமெரிக்க மக்களவையில் கடன் உச்சவரம்பை உயர்த்தும் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது. 23-06-2011 சனநாயகக் கட்சியினர் வரி விதிப்பை 400பில்லியன்களால் அதிகரிக்கப் பார்க்கிறார்கள் என்று குறை கூறி மீண்டும் அறுவர் குழுவிற்குள்(பிடென் குழு) முரண்பாடுகள் உருவாகின. ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து ஒபாமாவும் குடியரசுக் கட்சியினரும் தொடர் பேச்சுவார்த்தைகளிலும் இழுபறிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். குடியரசுக் கட்சியினர் கேட்கும் செலவீனக் குறைப்பிற்கு சனநாயாகக் கட்சியினர் ஒத்துக் கொள்கிறார்கள் இல்லை. சனநாயக் கட்சியினர் கேடும் வரி அதிகரிப்புக்களுக்கு குடியரசுக் கட்சியினர் ஒத்துக் கொள்கிறார்கள் இல்லை.

அமெரிக்கத் திறைசேரி
அமெரிக்கா தனது கடன் உச்ச வரம்பை ஆகஸ்ட் இரண்டாம் திகதிக்கு முன்னர் உயர்த்தாவிடில் வரலாற்றில் முதல் முறையாக தனது கடன் நிலுவையைச் செலுத்தாத நிலை ஏற்படும் என்று எச்சரிக்கிறது. குடியரசுக் கட்சியினர் கட்சி நலன்களுக்காக அமெரிக்கா தனது கடன்களைச் செலுத்த முடியாத நிலை ஏற்பட வேண்டும் என்று விரும்புகின்றனர். குடியரசுக் கட்சியினர் கட்சி அரசியலுக்கு அப்பால் நின்று சிந்திக்க வேண்டும் என்று திறைசேரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்லாவிடில் உலக நிதிச் சந்தையில் பெரும் நெருக்கடி ஏற்படும் என்றும் பலர் கருதுகின்றனர்.

தேநீர் விருந்துக் கட்சி
அமெரிக்காவில் 2009இல் இருந்து தேநீர் விருந்து கட்சி என்று ஒரு பழமைவாதக் கும்பல் வரி அதிகரிப்புக்களை எதிர்த்து வருகின்றது. இதுவும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் வரி அதிகரிப்பை பலமாக எதிர்க்கிறது. இது ஒரு இனவாதக் கும்பல் என்ற குற்றச்சாட்டும் உண்டு.

உலகெங்கும் அதிர்வலைகள் பாயும்
அமெரிக்கா தனது கடன் உச்ச வரம்பை உயர்த்தாவிடில் அமெரிக்காவின் கடன்படு திறன் குறைக்கப்படும் என்று Standard & Poor அறிவித்துள்ளது அமெரிக்காவின் கடன்படு திறன் குறைப்பு உலக வட்டி வீதத்தை உயர்த்தலாம். அமெரிக்காவின் கடன் உச்ச வரம்பு உயர்த்தப்படாமல் அது தன் கடன் நிலுவைகளைச் செலுத்த முடியாமல் போனால் அமெரிக்கக் கடன் முறிகளின் வீழ்ச்சியடையலாம். வட்டி வீதங்கள் அதிகரிக்கப்படலாம். பன்னாட்டு நிதிச் சந்தையைப் பொறுத்தவரை அமெரிக்கா தும்மினால் பல நாட்டு நிதிச் சந்தைகளிற்கு தடிமன் பிடிக்கும். இபோது அமெரிக்க நிதிச் சந்தைக்கு நிமோனியா ஏற்படும் ஆபத்து உள்ளது. அமெரிக்க நிதிச் சந்தையில் நிமோனியா என்றால் உலகச் சந்தையில் என்ன நடக்கும் என்பதுதான் பலரின் கவலை.

பிந்திய செய்திகள்:
1. 2011-ஜூலை 25th 5.00 GMT: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் அமெரிக்க கடன் உச்ச வரம்பை உயர்த்துதல் தொடர்பாக ஒரு உடன்பாடு எட்ட முடியும் என்று தெரிவித்துள்ளார். எண்ணெய் விலை ஒரு டொலர்களால் குறைந்தது. உலக பொருளாதார மந்தம் தொடரலாம் என்ற அச்சம் இதன் காரணம்.
2. 2011-ஜூலை 25th 6.00 GMT: அமெரிக்க நிதி நெருக்கடியை ஒட்டி பங்குகளினதும் கடன் முறிகளினதும் விலைகள் வீழ்ச்சியடைகின்றன. தங்கத்தின் விலையும் சுவிஸ் பிராங்கின் நாணயமாற்று வீகிதமும் உயர்ந்துள்ளன. முதலீட்டாளர்கள் தங்கள் பணங்களை பாதுகாப்பாக தங்கத்திலும் சுவிஸ் வங்கிகளிலும் முதலீடு செய்கிறார்கள்.
3. 2011-ஜூலை 25th 9.40 GMT: Senate Majority Leader Harry Reid அவர்கள் 2.7ரில்லியன் டொலர்கள் செலவீனக் குறைப்பும்(பத்து ஆண்டுகளில்) அதே அளவு கடன் உச்ச வரம்பு உயர்த்தலும் கொண்ட ஒரு சட்ட மூலத்தைத் தயாரித்துள்ளார். இதில் சமூக, சுகாதாரத் துறைகளுக்கான செலவீனங்கள் குறைக்கப்படமாட்டாது.
3. 2011-ஜூலை 25th 10.00 GMT: அமெரிக்க மக்களவைத் தலைவர் ஜோன் போர்னர் கடன் உச்ச வரம்பை உடனடியாக ஒரு ரில்லியன் டொலர்களாலும் பின்னர் அடுத்ததாஅண்டு ஒருரில்லியன் டொலர்களாலும் உயர்த்தும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
4. 2011-ஜூலை 25th 11.30 GMT: ஆசியப்பங்குகள் விலை வீழ்ச்சி. அதில் சீனப் பங்குகள் பெரும் வீழ்ச்சியைக் கண்டன.
5. 2011-ஜூலை 25th 15.50 GMT தங்கத்தின் விலை என்றுமில்லாத அளவு உயர்வு. Gold prices vaulted to a record $1,624.30 a troy ounce shortly after electronic trading opened Sunday night as buyers in Asia leapt at the chance to protect their wealth from rising uncertainty.
6. 2011-ஜூலை 26th 09.40 GMT: அமெரிக்க பாடகி அமியின் இறப்பையும் அமெரிக்கக் கடன் நெருக்கடியையும் சம்பந்தப்படுத்தி தனது டுவிட்டரில் எழுதியமைக்காக அமெரிக்க மக்களவை உறுப்பினர் பில்லி லோங் கடுமையான கண்னத்துக்கு உள்ளாகியுள்ளார். அவர் எழுதியது: #Amy Winehouse before it was too late. Can anyone reach Washington before it's too late? Both addicted - same fate???

ஆப்பிள் கணினியை கண்டு பிடித்த ஸ்டீவ் ஜாப்ஸ்(Steve Jobs),


ஆப்பிள் கணினியை கண்டு பிடித்த ஸ்டீவ் ஜாப்ஸ்(Steve Jobs) வாழ்க்கை ஒவ்வொரு மனிதரும் அறிந்திருக்க வேண்டிய கதையாகும். நம்பியவர்கள் ஏமாற்றுவதும், நயவஞ்சகர்கள் கூடிச் சதி செய்வதுமான உலகில் எதற்கும் கலங்காது தன்னை நிலை நிறுத்திக் கொண்ட இந்தத் தொழில் மேதையின் வாழ்வு, ஒவ்வொரு மனிதருக்கும் மிக அவசியமானதாகும்.


பரம ஏழையாகப் பிறந்த இவரை வளர்க்க முடியாத நிலையில் தாய் இன்னொருவருக்கு தத்துக் கொடுத்தார். அப்படிக் கொடுக்கும்போது அந்தத் தாய் பணத்தைக் கேட்கவில்லை, தன்னுடைய மகனை பல்கலைக்கழகத்தில் படிக்கவைத்து பட்டமும் பெற யார் உதவுவார்களோ அவர்களுக்கே தனது பிள்ளையை தத்தாக தருவேன் என்று தெரிவித்தார்.

அதற்கு உடன்பட்டு அவரை தத்தெடுத்த வளர்ப்புப் பெற்றோரும் பல்கலைக்கழகம் வரை அவரை படிப்பிக்க வைத்தார்கள். அதற்கு அப்பால் அவர்களால் முடியாமல் போனது. அதை அறிந்த ஸ்டீவ் ஜாப்ஸ் தானாக படிப்பை நிறுத்தினார். பட்டினியை தீர்க்க தினமும் ஏழு மைல் தூரம் நடந்து சென்று அங்குள்ள ஹரே கிருஷ்ணா மடத்தில் ஒரு வேளை உணவு சாப்பிட்டு தனது பசியைப் போக்கினார். நண்பர்களின் அறையில் தங்கி வெற்றுப் போத்தல்களை பொறுக்கி விற்று, படிப்பைத் தொடர்ந்தார். நீ வாழும் ஒவ்வொரு நாளையும் இன்றுதான் உனது வாழ்வின் கடைசிநாள் என்று நினைத்து வாழ் என்று எண்ணி வாழ்ந்தார். இதுதான் அவர் வாழ்வின் ஆதாரசுருதியாகும்.

பாதி நாட்கள் பட்டினி கிடந்தாலும் கூட, அவர் மனதில் எரிந்த அக்கினி ஓய்ந்துவிடவில்லை. கலிகிராபி என்ற கணினி எழுத்து வடிமைப்பை கண்டு பிடிக்க அல்லும் பகலும் போராடிக் கொண்டிருந்தார். பத்து வருடங்களாக போராடி மக்கின்ரொஸ் கம்ப்யூட்டரை வடிவமைத்தார். இவருடைய முறையை பின்பற்றி உருவாக்கப்பட்டதுதான் பின்னாளில் வந்த மக்கிரோ சொப்ரின் விண்டோஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்டு பிடிப்பு கைக்கு எட்டியதும் தனது 20 வது வயதில் நண்பரான லாஸ் என்பவருடன் இணைந்து சிறிய பட்டறையாக ஆரம்பித்தஆப்பிள் கணினித் தொழிற்சாலை 10 வருடங்களில் நாலாயிரம் தொழிலாளரைக் கொண்ட இரண்டு மில்லியான் டாலர் பெறுமதியான பாரிய தொழிற்சாலையாக உருப்பெற்றது.

நிறுவனம் வளர வளர அவருக்கும் அவரது நண்பருக்கும் கருத்து முரண்பாடு ஏற்பட்டது. கடைசியில் நிர்வாகத்தில் இருந்த சுயநலவாதிகளை எல்லாம் வளைத்துப் போட்ட நண்பர், ஆப்பிள் கணினியை கண்டு பிடித்த ஸ்டீவ் ஜாப்ஸ்சை ஆப்பிள் நிறுவனத்தில் இருந்தே தூக்கி வீசினார். பாம்புக்கு பால் வார்த்ததற்கான பரிசு ஸ்டீவ் ஜாப்ஸ்சிற்குக் கிடைத்தது.

தனது 20 வது வயதில் ஆரம்பித்த நிறுவனம் 30 வது வயதில் பறிபோக மறுபடியும் ஆரம்ப நிலைக்கே வந்து சேர்ந்தார். மற்றவர்களாக இருந்தால் அடியோடு உடைந்தே போயிருப்பார்கள். இரவு பகலாக பாடுபட்டு உருவாக்கிய நிறுவனத்தை கைப்பற்றிய நயவஞ்சக நண்பர்களையும், அவர்களுடைய இழி செயலையும் அவர் நினைத்து கவலைப்படவில்லை.


புதிய வேகத்துடன் யாருமே உருவாக்காதநெக்ஸ்ட்(next)என்ற புதிய நிறுவனத்தை உருவாக்கினார். இது சாதாரண நிறுவனமல்ல, இன்று நாம் பார்க்கும் அனிமேஷன் திரைப்படங்களை உருவாக்க இதுவே அடிப்படையாக அமைந்தது. புதிய கண்டு பிடிப்பால் ஆப்பிள் நிறுவனத்தை விட உயர்ந்த நிலைக்கு சென்ற அவருடைய நெக்ஸ்ற் நிறுவனத்தை கடைசியில் ஆப்பிள் நிறுவனமே வாங்கியது. ஸ்டீவ் ஜாப்ஸ் தான் ஆரம்பித்த நிறுவனத்திற்கு மறுபடியும் வெற்றியாளராக திரும்பினார். அடுத்தடுத்து ஆப்பிள் கணினிகளின் உற்பத்தியில் அபார சாதனைகளை படைத்தார்.

பின்நாளில் தான் உருவாக்கிய நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது பற்றியும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். அது கசப்பான நிகழ்வாக இருந்தாலும் அனிமேஷனை உருவாக்கும் இடத்திற்கு தான் வளர அதுவே உதவியது என்று கூறி அமைதி கண்டார்.

இதற்குப் பிறகு அவருக்கு கணையத்தில் புற்று நோய் வந்தது. வாழும் ஒவ்வொரு நாளும் கடைசிநாளே என்று வாழ்ந்த அவர் மனவுறுதி தளர்ந்துவிடவில்லை, புற்று நோய்க்கும் பயந்துவிடவில்லை, தொடர்ந்து, உழைத்தார்.

அவரின் மன உறுதிக்கு முன்னால் நிற்க முடியாது புற்று நோயும் மண்டியிட்டு ஓடியது. ஓர் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு அவரைப் பிடித்த புற்று நோயும் விலகிப் போனது. மீண்டும் யாரும் நம்ப முடியாதபடி எழுந்து நின்றார். தன்னை நெருங்கிய எல்லாச் சோதனைகளையும் எதிர்கொண்டு வாழ்வில் அரிய சாதனைகள் படைத்த ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசும்போது பின்வருமாறு கூறினார்.

- இனியவர்களே உங்கள் வாழ்க்கை குறுகியது, அதை நினைனவிற் கொள்ளுங்கள் வீணாக்காதீர்கள். இது உங்கள் வாழ்க்கை. எனவே நீங்கள் அடுத்தவர் வாழ்க்கையை வாழ்ந்தும், அடுத்தவர் சிந்தனையை சிந்தித்தும் வீணாக்கிவிடாதீர்கள். பிறர் கருத்துக்களின் பேராசையில் உங்கள் உள்ளத்து உணர்வுகள் கூறும் வார்த்தைகளை கவனமாகக் கேட்க மறந்துவிடாதீர்கள். உங்கள் இதயமும், உள்ளுணர்வும் கூறுகிறபடி கேட்டு வாழுங்கள். சாதிக்கும் தாகத்தோடு இருங்கள், அறிவுப் பசியோடு இருங்கள் ! – என்றார்.







பொதுவாக அறிவுரை பலரிடமிருந்தும் கிடைக்கலாம். ஆனால் சாதித்தவர்களின் அறிவுரைகள் விலைமதிப்பற்றவையாகும். அவற்றைப் பின்பற்றினால் அடைய முடியாத சிகரங்கள் இல்லவே இல்லை. ஸ்டீவ் ஜாப்ஸ் அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டிய அற்புத மனிதர்.


பணக்காரர்கள் திமிர் பிடித்தவர்கள்?

தமிழ் படங்களில் வழக்கமாக வரும் திரைக்கதை இது. பணக்காரர்கள் வில்லனாக வருவார்கள், ஹீரோ ஏழையாக இருந்து ஒரே பாட்டில் பணக்காரராக மாறி வில்லனின் கொட்டத்தை அடக்குவார்.

பணம் ஒரு மனிதனை கெட்டவனாகவும் திமிர் பிடித்தவனாகவும் மாற்றுகிறதா என்று அமெரிக்காவிலும் கனடாவிலும் ஆராய்ச்சிகள் செய்து பத்திரிகையில் வெளியிட்டிருந்தார்கள். இந்த ஆராய்ச்சியில் பங்கு பெற்ற அனைவரும் கல்லூரி மாணவர்கள்.



இந்த மாணவர்கள் கையில் பணத்தை கொடுத்து அதன் தாக்கம் என்ன என்று ஆராய்ச்சி நடத்தப்படவில்லை. புதுமையான முறையில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது – பணத்தை பற்றி “நினைப்பது” மனிதனின் மனதை மாற்றுகின்றதா என்று!

மொத்தம் ஒன்பது சோதனைகள் பல கல்லூரிகளில் நடத்தப்பட்டது. ஒவ்வொரு சோதனையிலும் மாணவர்கள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர். பணம் சம்பந்தப்பட்ட பிரிவு (money prime), நார்மல் பிரிவு (control group) என்று பெயரிடப்பட்டன.

பணம் சம்பந்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு பணத்தை பற்றிய hints அடிக்கடி கொடுத்துக் கொண்டே இருந்தார்கள் – உதாரணமாக பணத்தை பற்றி வகுப்புகளில் அதிகம் பேசுவது, பணத்தை மையமாக வைத்து புதிர் விளையாட்டுகள் விளையாடுவது போன்றவை. நார்மல் பிரிவு மாணவர்களுக்கு இது போல பணம் பற்றிய சிந்தனை தூண்டவில்லை.

சில வாரங்கள் கழித்து, இரு பிரிவினரையும் பல்வேறு சோதனைகள் செய்தார்கள்.

1. இரு பிரிவினருக்கும் ஒரு புதிர் கொடுக்கப்பட்டது. உதவி தேவைப்பட்டால் தாராளமாக கேட்கலாம் என்று சொல்லப்பட்டது. நார்மல் பிரிவு மாணவர்கள் உதவி கேட்க தயங்கவில்லை. பணம் சம்பந்தப்பட்ட பிரிவு மாணவர்கள் மற்றவர்களிடம் உதவி கேட்பதை தாழ்வாக கருதினார்கள்.

2. இரு பிரிவு மாணவர்களிடமும் பல்வேறு தருணங்களில் பல விதமான உதவிகள் (அஸைன்மென்ட்டுக்கான உதவி, கல்லூரிக்கு நன்கொடை போன்றவை) கேட்கப்பட்டன. இந்த ஆராய்ச்சியில் நேரடியாக பங்கு பெறாத மற்ற மாணவர்களின் மூலம் இந்த உதவிகள் கேட்கப்பட்டன. பணம் சம்பந்தப்பட்ட பிரிவு மாணவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்ய தயங்கினார்கள். நார்மல் பிரிவு மாணவர்களுக்கு அந்த தயக்கம் இல்லை.

3. பணம் சம்பந்தப்பட்ட பிரிவு மாணவர்கள் பிறருடன் சேர்ந்து சுற்றாமல் தனியாக இருப்பதிலே அதிக ஆர்வம் காட்டினார்கள்.

இந்த ஆராய்ச்சி பதிவை எழுதிய கேத்லீன் வோஸ் (UM கார்ல்சன் மேனேஜ்மென்ட் கல்லூரி) என்ற பேராசிரியரின் முடிவு:

“பணம் ஒரு மனிதனை திமிர் பிடித்தவனாக மாற்றுவதில்லை, ஆனால் சமூக சிந்தனையை குறைத்து விடுகின்றது”.

பணத்தை பற்றியே அதிகம் சிந்திப்பவர்களுக்கு கிடைப்பது Social Cluelessness என்று கேத்லீன் சொல்கிறார்.

இந்த ஆராய்ச்சியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்று கேத்லீன் எழுதியிருக்கிறார்.

» மேனேஜராக இருப்பவர்கள் தங்களிடம் வேலை பார்ப்பவர்களை உற்சாகப்படுத்த எப்போதும் பணத்தை மட்டும் உபயோகப்படுத்த கூடாது. உங்களிடன் வேலை செய்பவர்களின் கூட்டு முயற்சி (team work) உங்களுக்கு தேவைப்பட்டால் பணத்தை மோட்டிவேட்டராக பயன் படுத்தக்கூடாது. பணத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தால் team work இல்லாமல் போய்விடும்.

» ஒரு சில வேலைகள் தனிப்பட்டவரின் திறமையால் மட்டுமே நடக்கும். உதாரணம்: டி.வி. நிருபர், ஒரு குறிப்பிட்ட பங்கை பற்றி மட்டும் ஆராய்ச்சி செய்பவர். இவர்களுக்கு பணத்தின் மூலம் ஊக்கத்தை கொடுக்கலாம்.

» பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் அடிக்கடி பணத்தை பற்றி பேசுவது, ஆடம்பரமாக செலவு செய்வது போன்றவை அந்த குழந்தைகளின் சமூக சிந்தனையை குறைத்து விடும்.

நல்ல நிறுவனப் பங்குகள்

பங்குகளை வாங்க வேண்டும்.............ஆனால் நல்ல நிறுவனப் பங்குகளை எப்படி அடையாளம் கண்டு கொள்வது ?

நீங்கள் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு முன்பு, அந்த நிறுவனத்தின் ஆண்டறிக்கையைப் பார்த்திருக்கிறீர்களா ? பங்குகளில் முதலீடு செய்யும் எத்தனைப் பேர் ஆண்டறிக்கையைப் பார்த்து, ஆய்வு செய்து பங்குகளை வாங்கியிருக்கிறீர்கள் ? நமக்குக் கிடைக்கும் ஏதோ ஒரு டிப்ஸ், ஏதோ ஒரு தினசரியில் "Buy" என்று முத்திரைக் குத்தப்பட்டப் பங்குகள். இவைகளைக் கண்டு தானே சிறிதளவுக் கூட யோசிக்காமல், பங்குகளை வாங்குகிறோம். ஏன் இத்தகைய மனநிலை ?


"நம்மால் ஆய்வு செய்ய முடியாது. இது ஒரு சிக்கலான கணக்கு வழக்கு" என்ற எண்ணமே நம்மை ஆட்டிப் படைக்கிறது. வணிக நாளிதழ்களும், தொலைக்காட்சிகளும் Technical Analysis, Resistance Level, Support Level,Relative Strength Index என்று பலப் புரியாத வார்த்தைகளைச் சொல்லி நம்மை மிரட்டி வைத்துள்ளன. அனலிஸ்டுகள் நன்றாக ஆய்வு செய்து தான் சொல்வார்கள் என்ற எண்ணத்தில், கடவுளின் மேல் பாரத்தை போட்டு விட்டு நாமும் நாம் பாடுபட்டு சேர்த்தப் பணத்தை முதலீடு செய்வோம்.

அதுவும் நமக்கு இது வரை தெரியாதப் பங்குகளை சொன்னால் தான் நாம் வாங்குவோம். "snl bearings" நல்ல லாபமடையும் என்று அனலிஸ்டுகள் ஆருடம் சொல்வார்கள். அது என்ன நிறுவனம். என்ன உற்பத்திச் செய்கிறது.அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், டிப்சை அப்படியே பின்பற்றி வாங்குவோம். அந்த நிறுவனம் நல்ல நிறுவனமாகவே இருக்கலாம். ஆனால் ஆய்வு செய்யாமல் நாம் பாடுபட்டு சேர்த்தப் பணத்தை முதலீடு செய்யலாமா ?

சிக்கலான கணக்குகளைப் போடாமல் எளிதாக ஆராய முடியும். நாம் அன்றாடம் பார்க்கும் ஒவ்வொரு நிகழ்வும் ஆய்வு தான் .
இது ஆராய்ச்சியின் ஆரம்ப நிலை தான். நம்முடைய ஆராய்ச்சியின் அடுத்த நிலை அந்த நிறுவனத்தின் ஆண்டறிக்கையைப் பார்ப்பது தான்.